அதிமுகவுடனான கூட்டணி மகிழ்ச்சி அளிக்கிறதா? சட்டென யோசிக்காமல் அண்ணாமலை கொடுத்த பதில்! நோட் பண்ணுங்க
சென்னை: அதிமுக மற்றும் பாஜக இடையேயான கூட்டணி இப்போது இறுதியாகியுள்ளது. 2026 சட்டசபைத் தேர்தலை இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தே சந்திக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அதிமுகவுடனான கூட்டணி மகிழ்ச்சி அளிக்கிறதா என்ற கேள்விக்கு அண்ணாமலை அளித்த பதில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு தான் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. ஆனால், இப்போதே தேர்தலை மனதில் வைத்துக் காய் நகர்த்தல்கள் தொடங்கிவிட்டது. அதில் குறிப்பாக அதிமுக பாஜக இடையேயான கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. 2026 சட்டசபைத் தேர்தலை அதிமுக பாஜக இணைந்து என்டிஏ கூட்டணியாக எதிர்கொள்கிறது.

அண்ணாமலை
அண்ணாமலை பாஜக மாநிலத் தலைவராக இருந்தபோது தான் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது. இதற்கிடையே இப்போது மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை மாற்றப்பட்டு, நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்ட பிறகே கூட்டணிக்குள் அதிமுக வந்துள்ளது. மேலும், இந்தக் கூட்டணியில் அண்ணாமலை தரப்பிற்கு விருப்பம் இல்லை என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே கூட்டணி குறித்த கேள்விக்கு அண்ணாமலை பதிலளித்துள்ளார். அதிமுக பாஜக கூட்டணி குறித்த அண்ணாமலையின் இந்தப் பதில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
அதிமுக பாஜக கூட்டணி
இது தொடர்பாகச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அண்ணாமலை, "நான் ஒரு தொண்டன். (நேற்று) மாலை 5 மணி வரை நான் பாஜக மாநிலத் தலைவராக இருந்தேன். இன்று முதல் நான் சாதாரணத் தொண்டன். இது கட்சித் தலைமையின் முடிவு. மோடி, அமித்ஷா, நட்டா ஆகியோர் எடுத்த முடிவு. கட்சி ஒரு முடிவை எடுத்த பிறகு, அதற்கேற்ப ஒரு தொண்டர் நடந்து கொள்வதே கட்சியின் குணம்.
நான் இன்று எந்தவொரு பொறுப்பும் இல்லாத அடிப்படை தொண்டர். 2026ல் நிச்சயம் தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் ஆட்சியை அமைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
தூக்கத்தைத் தொலைத்த ஸ்டாலின்
அதிமுக என்டிஏ கூட்டணி வலிமையைச் சேர்த்துள்ளது. தமிழகத்தில் 2026 தேர்தலை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான என்டிஏ கூட்டணி எதிர்கொள்ளும். கூட்டணி அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழகத்தில் ஒரு வலிமையான கூட்டணி இருக்கிறது.. திமுகவை அகற்ற ஒரு மாற்று இருக்கிறது என்று மக்கள் மனதில் நம்பிக்கை வந்துள்ளது.
கூட்டணி அறிவிப்பு வந்தவுடன் முதல்வர் ஸ்டாலினுக்கு தூக்கம் போய்விட்டது. இதன் காரணமாகவே கூட்டணியை விமர்சித்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அது அவரது மனக்குமுறலாகவும் அச்சமாகவும் தான் இருக்கிறது. 2026ல் என்ன நடக்கும் என்பதை யூகித்து அவர் அந்த அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.
குறைந்தபட்ச செயல்திட்டம்
அதிமுக மற்றும் பாஜக இரண்டும் வெவ்வேறு சித்தாந்தங்களைக் கொண்ட கட்சி. 2024ல் தனித்தனியாகத் தேர்தலை எதிர்கொண்ட கட்சிகள் 2026ல் ஒன்றாகச் சேர்ந்துள்ளோம். சில விவகாரங்களில் இரு கட்சிகளுக்கும் இடையே வெவ்வேறு கொள்கைகள் உள்ளன. இதனால் காமன் மினிமம் புரோகிராம் மூலம் செயல்பட முடிவு செய்துள்ளோம். இதில் எந்தவொரு குழப்பமும் எங்களுக்கு இல்லை" என்றார்.
பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள அண்ணாமலை, இப்போது தேசியப் பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இனி அண்ணாமலைக்கு தேசிய அரசியலில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications