மூக்கை நுழைக்காதீங்க.. கனிமொழி படித்து படித்து சொன்னாரே! பாருங்க.. இப்ப எச்சரித்த மாதிரியே ஆகிடுச்சு
சென்னை: தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெண் கவுன்சிலர்கள் பலர் வெற்றி பெற்று இருந்த நிலையில்தான் தற்போது.. திமுக எம்பி கனிமொழி எச்சரிக்கை விடுத்தது போலவே சில இடங்களில் பெண் கவுன்சிலர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன.. அப்படி என்ன நடந்தது என்று பார்க்கலாம்!
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு வழங்கப்பட்டது. சென்னையில் 200 வார்டுகளில் பெண்கள்தான் அதிகம் வென்றனர். 101 வார்டுகளை பெண்கள் பிடித்து புதிய சாதனை படைத்தனர்.
அதோடு சென்னை உட்பட 11 முக்கியமான மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. சென்னை, தாம்பரம் மாநகராட்சிகள் பட்டியலின பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது.

என்ன நடந்தது
தமிழ்நாடு இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாலின ரீதியாக இவ்வளவு பெரிய சாதனையை படைத்தது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் சரியாக 15 நாட்களுக்கு முன் திமுக எம்பி கனிமொழி கவுன்சிலர்களின் பணிகள் குறித்து முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்தார். முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த திமுக விழாவில் பேசிய கனிமொழி, பெண் கவுன்சிலர்கள் சிறப்பாக பணி செய்ய வேண்டும்.

பெண் கவுன்சிலர்கள்
அவர்களின் பணிகளில் குடும்பத்தினர் மூக்கை நுழைக்க கூடாது. பெண் கவுன்சிலர்களை சுயமாக பணி செய்ய விடமால் வீட்டு ஆண்கள் தலையிட கூடாது. வீட்டில் உள்ள கணவர், அப்பா, அண்ணன் ஆகியோர் வேலைகளை பார்த்துக்கொள்வார்கள் என்று பெண் கவுன்சிலர்கள் சும்மா இருந்துவிட கூடாது. உங்களுக்கு அதிகாரம் கிடைத்துள்ளது. அதை நன்றாக பயன்படுத்துங்கள். நீங்கள் இப்போது நன்றாக செயல்பட்டால்தான் வரும் காலத்தில் பெண்களுக்கு மேலும் அதிகாரம் கிடைக்கும், என்று கனிமொழி எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

ஏன் இப்படி
தமிழ்நாட்டில் என்று இன்றி இந்தியா முழுக்கவே இந்த வழக்கம் இருக்கிறது. பெண்களுக்கு என்று ஒதுக்கப்படும் தொகுதிகளில் அரசியல் ஆண் தலைவர்கள் தங்கள் மனைவிகளை தேர்தலில் நிற்க வைத்து வெற்றிபெற வைப்பார்கள். அதன்பின் அதிகாரபூர்வமாக மனைவி பதவியில் இருந்தாலும் கணவர்தான் நிழல் தலைவராக வலம் வருவார். கையெழுத்து போடுவது மட்டுமே மனைவி மற்ற முடிவுகளை எல்லாம் எடுப்பது கணவர் என்ற நிலையே இருக்கும்.

கனிமொழி
இதைத்தான் கனிமொழி நடக்க கூடாது என்று எச்சரிக்கை விடுத்து இருந்தார். இந்த நிலையில்தான் சென்னையில் கனிமொழி எச்சரிக்கை விடுத்தது போலவே கவுன்சிலர்கள் பலரின் வீட்டு ஆண்கள் கவுன்சிலருக்கான பணியை செய்வதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், பெண் கவுன்சிலர்களில் பலரின் கணவர்கள்தான் கவுன்சிலருக்கான பணிகளை செய்கிறார்கள்.

தாம்பரம்
முக்கியமாக தாம்பரம் மாநகராட்சியில் பல்வேறு வார்டுகளில் பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் தங்கள் கவுன்சிலர்கள் என்று கூறி வலம் வருகிறார்கள். வார்டு 13ல் திமுக கவுன்சிலர் ரேணுகா தேவியின் கணவர் பரமசிவம்தான் தன்னை கவுன்சிலர் என்று கூறி வலம் வந்து கொண்டு இருக்கிறார். ஆனால் அங்கு ரேணுகா தேவிதான் கவுன்சிலர் என்றாலும் பரமசிவம் தன்னை கவுன்சிலர் என்று மக்களிடம் தெரிவிப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.

மக்களுக்கு உறுதி
மக்களின் குறைகளை நேரடியாக சென்று கேட்கும் இவர், ரோடு போடலாம், சாலை போடலாம் என்று உறுதி அளிக்கிறார். இது நல்ல விஷயம் என்றாலும், முறைப்படி இது அவரின் மனைவி செய்ய வேண்டிய வேலை. அதேபோல் இந்த பகுதி மக்கள், ரேணுகாவை நேரில் பார்க்கவே முடியவில்லை. எல்லாம் அவர் கணவர்தான் என்று டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளனர். இதையடுத்து விளக்கம் அளித்த ரேணுகா தேவி, இனி இப்படி நடக்காது. இனி கணவருக்கு பதிலாக தான் மட்டுமே தினசரி பணிகளை செய்வேன் என்று உறுதி அளித்துள்ளார்.

வார்டு 24
அதேபோல் தாம்பரம் வார்டு எண் 24ல் இதேபோல் சம்பவம் நடந்துள்ளது. அங்கு கவுன்சிலராக இருப்பவர் திமுகவின் கீதா நாகராஜன். ஆனால் அவரின் கணவர் நாகராஜன்தான் அங்கு முடிவுகளை எல்லாம் எடுப்பதாக அப்போது மக்கள் தெரிவித்துள்ளனர். இவர்தான் நேரடியாக வந்து சோதனை பணிகளை செய்கிறார். போனை கூட இவர்தான் எடுக்கிறார். அவரின் மனைவி கவுன்சிலர் கீதாவிடம் போனில் கூட பேச முடியவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தாம்பரம்
அதேபோல் தாம்பரம் வார்டு எண் 35, 36 ஆகியவற்றில் பெண் கவுன்சிலர்கள் வெற்றி பெற்று இருந்தாலும், இங்கு முழுக்க முழுக்க கவுன்சிலர்கள் கணவர்கள் மட்டுமே முடிவுகளை எடுப்பதாக கூறப்பட்டுள்ளது. மனைவிகளை வீட்டில் விட்டுவிட்டு இவர்கள் மட்டுமே களத்திற்கு வருகிறார்களாம். இதில் 36வது வார்டு கவுன்சிலர் சரஸ்வதிக்கு பதிலாக அவரின் கணவர் சந்திரசேகர்தான் முடிவுகளை எடுக்கிறாராம். இதற்கு அவர் விளக்கமும் அளித்து இருக்கிறார்.

விளக்கம் என்ன
நான் அரசியலில் நீண்ட காலமாக இருக்கிறேன். எனக்கு மக்கள் பிரச்சனை தெரியும், என்று அவர் விளக்கம் அளித்து இருக்கிறார். இதேபோல் சென்னை வார்டு 175ல் பெண் கவுன்சிலர் மகேஸ்வரிக்கு பதிலாக அவரின் கணவர்தான் முடிவுகளை எடுக்கின்றனர். இதை அந்த பெண் கவுன்சிலர்களும் எதிர்க்கவில்லை. எங்கள் கணவர் பல வருடங்களாக அரசியலில் உள்ளனர். அதனால் அவர்கள் களத்தில் உள்ளனர். இந்த வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்படவில்லை என்றால், எங்கள் கணவர்தான் கவுன்சிலர் ஆகி இருப்பார்கள்.

பெண் கவுன்சிலர்கள்
அதனால் இப்போதும் அவர்களே வேலைகளை செய்கிறார்கள் என்று விளக்கம் அளித்து உள்ளனர். அதாவது தங்கள் கணவர்கள் கவுன்சிலர் பதவிகளை செய்வதை பெண் கவுன்சிலர்கள் தடுக்கவில்லை என்பதுதான் நிதர்சனமாக உள்ளது. தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் பல்வேறு வார்டுகளில் இதுவே நிலையாக உள்ளது. இந்த நிலையில் இப்படி பெண் கவுன்சிலர்கள் பணிகளை செய்யும் அவர்களின் கணவர்கள் மீது திமுக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழ தொடங்கி உள்ளன.












Click it and Unblock the Notifications