78வது சுதந்திர தின கொண்டாட்டம்! ரயில், விமான நிலையங்களில் உச்சக்கட்ட பாதுகாப்பு.. போலீசார் குவிப்பு
சென்னை: நாடு முழுவதும் நாளை 78வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. ரயில், விமான நிலையங்களில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. சென்னை, கோவை, மதுரை என முக்கிய நகரங்களில் அதிக அளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.
சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி தேசியக் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்ற இருக்கிறார். 'வளர்ந்த பாரதம்' என்ற கருப்பொருளில் நிகழாண்டு சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.

தமிழகத்தை பொறுத்த அளவில், சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல் துறையின் பல்வேறு பிரிவினர் அளிக்கும் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்ட பின் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் சுதந்திர தின உரையாற்றிய பின், விருதுகளை வழங்குகிறார்.
முதல்வர் ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றி வைத்ததும், அனைத்து மாவட்டங்கள், அரசு அலுவலகங்களிலும் தேசியக்கொடி ஏற்றப்படும். புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளம், தலைமைச்செயலக கட்டிடம் ஆகியவை வண்ணம் பூசப்பட்டு, வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோட்டை கொத்தளத்தின் எதிரில், 3 பிரமாண்ட மேடைகள் அமைக்கப்பட்டு நிகழ்ச்சியை பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தை பொறுத்தவரை விழா நடைபெறும் சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையைச் சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்படுகிறது. அதோடு மட்டும் அல்லாமல் சென்னையில் 9 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சென்னை விமான நிலையத்துக்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்ட்ரல், எழும்பூர் உட்பட சென்னை மற்றும் புறநகரில் உள்ள அனைத்து ரயில் மற்றும் விமான நிலையங்களும் போலீஸாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் படிப்படியாக கொண்டு வரப்பட்டு வருகிறது.
சென்னை தொடங்கி குமரி வரை, மொத்த ரயில் நிலையங்களிலும் 1500 ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். இவர்களுடன் சேர்த்து ரயில் பாதுகாப்புப்படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். பயணிகளை கண்காணிப்பது, சந்தேகத்திற்குரிய நபர்களை அடையாளம் காண்பது, தண்டவாளங்களில் ரோந்து, மோப்ப நாய் உதவியுடன் பரிசோதனை என போலீசார் தீவிரமான பாதுகாப்பு பணியில் இறங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications