விஸ்வரூபம் எடுக்கும் நில அளவையர் தேர்வு! ஒரே மையத்திலிருந்து 700 பேர் எப்படி தேர்ச்சி? ராமதாஸ் ஐயம்!
சென்னை: காரைக்குடியில் ஒரே மையத்தை சேர்ந்த 700 பேர் நில அளவையர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது பெரும் ஐயத்தை எழுப்பியுள்ளதாக ராமதாஸ் கூறியிருக்கிறார்.
நில அளவையர் தேர்வு விவகாரத்தை அரசியல் கட்சிகள் கையில் எடுக்கத் தொடங்கியுள்ளதால் அந்தப் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்துள்ளது.
இதனிடையே டிவிட்டர் பக்கத்தில் ராமதாஸ் எழுப்பியுள்ள சந்தேகங்கள் வருமாறு;

வாய்ப்பில்லை
தமிழ்நாடு அரசுத்துறைகளுக்கு 1089 நில அளவர், வரைவாளர்களை தேர்வு செய்வதற்காக கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்வில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய ஏறக்குறைய 700 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். வாய்ப்பில்லாத இந்த சாதனை ஐயத்தை ஏற்படுத்துகிறது.

700 பேரும் காரைக்குடி
மொத்தமாக தேர்ச்சி பெற்ற 700 பேரும் காரைக்குடியில் உள்ள நடுவத்தில் தேர்வு எழுதியுள்ளனர். அவர்களின் பெரும்பான்மையினர் காரைக்குடியில் உள்ள தனியார் பயிற்சி நடுவத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பது ஐயத்தின் அளவை உயர்த்தியிருக்கிறது.

இயற்கைக்கு எதிரானது
வெற்றி பெற்றவர்கள் முறையாக பயின்று திறமையால் தேர்வில் வெற்றி பெற்றிருந்தால் மகிழ்ச்சி தான். ஆனால், மொத்த பணியிடங்களில் 70% இடங்களுக்கு ஒரே மையத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெறுவது இயற்கைக்கு எதிரானது என்பதால் அது குறித்த உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும்.

பெருமளவில் முறைகேடு
2018-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நான்காம் தொகுதி தேர்வில் முதல் 100 இடங்களில் இராமேசுவரம், கீழக்கரை நடுவங்களில் தேர்வு எழுதிய 35 பேர் இடம் பெற்றிருந்தது குறித்த ஐயத்தின் அடிப்படையில் விசாரணை நடத்திய போது பெருமளவில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
நில அளவர் தேர்விலும் அத்தகைய முறைகேடுகள் ஏதேனும் நடைபெற்றதா? என்பதை நாட்டுக்கு தெரிவிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். எனவே, இது குறித்து விசாரணை நடத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.












Click it and Unblock the Notifications