கர்ஜனை என கத்துகிறார் போர்ஜரி வீரர்... சீமான் குறித்து முரசொலியில் விமர்சனம்
சென்னை: நாம் தமிழர் என்ற உலக உரிமையை பெற்றுள்ளதாக கருதி, கர்ஜனை என நினைத்து மேடைகளில் கத்துகிறார் ஒருவர் என்று சீமான் குறித்து முரசொலி நாளிதழில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.
இரண்டு திராவிட கட்சிகளும் ஆட்சியை விட்டு போனால், இந்த நாடு நன்றாக இருக்க முடியும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருந்தார்.
மேலும், ஸ்டாலின் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரிப்பது குறித்தும் விமர்சனம் செய்த சீமான், நாம் தமிழர் கட்சி அது போன்ற பிரச்சாரத்தில் ஈடுபடாது என்றும் கூறினார். இந்தநிலையில், திமுக கட்சியின் இதழான முரசொலியில் விமர்சனகட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
போர்ஜரி வீரர்
அதில், ஒரு 'போர்ஜரி வீரர்' இருக்கிறார் அவர் யாரைத் தமிழர் என்று சொல்கிறாரோ அவர், மட்டுமே தமிழர். தமிழ்நாட்டில் மீதம் இருக்கிறவர்கள் வந்தேறிகள் - வடுகர்கள். இந்த மாமனிதர் தம்மை மாவீரர் என்று நினைத்துக் கொண்டு, உரையாற்றுவார். அவரின் தேர்தல் பரப்புரையை, நாம் அவர் மீது அன்பு கொண்ட தொலைக்காட்சியில் கேட்போம்.
டீ சாப்பிடுகிறார்
ஸ்டாலின் திண்ணையிலே போய் உட்காருகிறார். டீ சாப்பிடுகிறார். வீதியிலே நடக்கிறார். முதல்வரானால் இப்படித் திண்ணையிலே போய் அமர்ந்து டீ குடிப்பாரா வீட்டிலே இருந்து பிளாஸ்கிலே எடுத்து வந்து அல்லவா குடிப்பார் என்று பேசி இருக்கிறார்.
உசுப்பி விடுவார்
கட்செவியிலே ஓர் செய்தி - இவரின் பெயரால் வெளிவந்ததாக அறிந்தோம். திமுக காரர்களுக்கு அம்பேத்கரைப் பற்றி தெரியுமா? அயோத்திதாசப் பண்டிதரைப் பற்றி தெரியுமா? என்று கேட்டு இருக்கிறார். இந்த வெற்று கர்ஜனை வீரர் குரல் கனமாக, ஆளைப் போலவே இருப்பதால் எதை வேண்டுமானாலும் அவர் பேசி விடுவார். அவரை நம்பி வருபவர்களை உணர்ச்சியைக் கொட்டி, உசுப்பி விடுவார்.
ஆ.இராசாவைப் போய் பாருங்கள்
கர்ஜனை வீரரின் கத்தலில் இருந்து ஓர் உண்மை வெளிவந்து இருக்கிறது. கழகத் தலைவர் ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்வர் ஆவார் என்பது தான் அது. அயோத்திதாசரைப் பற்றியும், அம்பேத்கரைப் பற்றியும் கர்ஜனை வீரருக்கு அய்யம் ஏதாவது வந்தால், ஆ.இராசாவைப் போய் பாருங்கள்.
'அது' போதாது
இல்லையெனில், ஒரு கூட்டம் ஏற்பாடு செய்து அவரை அழையுங்கள். திமுக காரன் எப்படி இருக்கிறான் என்பதற்கு அது ஒரு முன்மாதிரி. கழகத் தலைவர் ஸ்டாலினிடம் போகவோ, அவரைப் பற்றி பேசவோ வெற்றி வீரர்க்கு 'அது' போதாது முதலில் வெற்றுக் குரலைத் தாழ்த்துங்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.