அசானி புயல் கரையை கடக்காது... ஆனாலும் கனமழை இருக்கு கவனம் மக்களே!
தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான அசானி புயல் கரையை தொடும் முன்பு வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
சென்னை: அசானி புயல் கரையைத் தொடாமல் கடலிலேயே வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இருப்பினும் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.
Recommended Video
தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான அசானி புயல் கரையை தொடும் முன்பு வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் ஒடிசா, மேற்கு வங்கத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அசானி புயல் நேற்று மாலை 5.30 மணி அளவில் தீவிர புயலாக மாறி தென் கிழக்கு மற்றும் மேற்கு மத்திய வங்கக்கடலில் நிலை கொண்டு இருந்தது. வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசாவின் கடற்கரையை நோக்கி நகர்ந்து வரும் இந்த புயல், வடக்கு ஆந்திர கடற்கரையை நெருங்குவதற்கு முன் வடகிழக்கு திசையில் நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தீவிர புயலான அசானி
வங்கக் கடலில் புதிதாக உருவாகியிருந்த அசானி புயல், தீவிர புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் நகர்வு தடத்தின்படி, வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசாவை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் செவ்வாய்கிழமை புயல் மையம் கொள்ளும். புயல் கரையைக் கடக்க வாய்ப்பில்லை, அடுத்த இரண்டு நாட்களில் மாநிலங்களின் கடலோர மாவட்டங்களைத் தாக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கடலுக்குள் வலுவிழக்கும்
10ம் தேதிக்கு பின்னர், கடலிலேயே அசானி புயல் வலுவிழக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இருப்பினும் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அசானி புயல் நகரும் வேகம்
அசானி புயல் நேற்று மாலை அந்தமான் நிகோபாருக்கு வடமேற்கே 610 கிமீ தொலைவிலும், போர்ட் பிளேயருக்கு மேற்கே 500 கிமீ தொலைவிலும், விசாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 810 கிமீ தொலைவிலும், பூரிக்கு தென்-தென்கிழக்கே 880 கிமீ தொலைவிலும் மையம் கொண்டிருந்தததாக தெரிவிக்கப்பட்டது.

எத்தனை நாட்களுக்கு மழை
செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் ஒடிசாவில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் மே 12ஆம் தேதி வரை இடி, மின்னல் மற்றும் லேசான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் முன்னெச்சரிக்கையாக கொல்கத்தாவில் பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புப் படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மழை
அசானி புயல் காரணமாக தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 11 மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

3 மணிநேரத்திற்கு மழை
இதனிடையே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.












Click it and Unblock the Notifications