லைட்டுக்கு பதிலாக மின் மோட்டாரை போட்ட திருடர்கள்! அசோக் நகரிலிருந்து நெதர்லாந்துக்கு அடித்த அலாரம்
சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ஒருவர் தனது வீட்டை பூட்டி கொண்டு நெதர்லாந்துக்கு சென்றிருந்த நிலையில் வீடு புகுந்து இருவர் திருடியது அங்கிருந்த அவரது செல்போனுக்கு அலாரமாக ஒலித்ததில் இருவரும் சிக்கினர்.
மேற்கு மாம்பலம், சீனிவாச பிள்ளைத் தெருவைச் சேர்ந்தவர் வெங்கட்ரமணன் (58). இவர் கடந்த 4ஆம் தேதி தனது மனைவி கலாவுடன் ஐரோப்பாவில் உள்ள நெதர்லாந்துக்கு சென்றிருந்தார்.

அங்கு அவர்களது மகன் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அதிகாலை மேற்கு மாம்பலத்தில் பூட்டியிருக்கும் வீட்டில் யாரோ மோட்டார் போடுவதாக நெதர்லாந்தில் உள்ள வெங்கட்ரமணனின் மொபைல் போனுக்கு அலாரம் அடித்தது.
வீட்டில் யாரும் இல்லாத நிலையில் யார் மோட்டார் போட்டிருப்பார்கள் என சந்தேகமடைந்த வெங்கட்ரமணன் தனது செல்போன் மூலம் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பார்வையிட்டார். அப்போது யாரோ இருவர் தனது வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்துக் கொண்டிருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே தனது பக்கத்து வீட்டுக்காரரான ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் வெங்கடசுப்பிரமணியனுக்கு போன் போட்டு வெங்கட ரமணன் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு அசோக் நகர் போலீஸார் விரைந்தனர். அப்போது போலீஸ் வருவதை அறிந்த திருடர்கள் இருவரும் அந்த வீட்டிலிருந்து தப்பிச் சென்று பக்கத்து தெருவான பக்தவச்சலம் தெருவில் பதுங்கினர். அவர்களை போலீஸார் பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் பல்லாவரத்தைச் சேர்ந்த கமலகண்ணன் (65), திருப்பத்தூரை சேர்ந்த ஆரி பிலிப் (57) என்பது தெரியவந்தது. இருவரும் வெங்கடரமணின் வீட்டில் திருடிய 6 சவரன் நகை, ஒன்றரை கிலோ வெள்ளி, 27 வெளிநாட்டு கரன்சிகள், ஸ்மார்ட் வாட்ச், இரு சிறிய ஐம்பொன் சிலைகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் விசாரணையில் வெங்கட்ரமணனின் வீட்டிற்கு எதிர் வீட்டில் உள்ள ஆடிட்டிங் அலுவலகத்தின் பூட்டை உடைத்து இருவரும் திருட முயன்றனராம். அப்போது அங்கு லேப்டாப்புகளை தவிர வேறு எதுவும் இல்லாததால் அதை அங்கேயே போட்டுவிட்டு தப்பிவிட்டனர். இதையடுத்து வெங்கட்ரமணன் வீடு பூட்டியிருப்பதை அறிந்து அங்கே நுழைய முயன்று சிக்கினர்.
போலீஸாரை பார்த்து விட்டு தப்ப முயன்ற போது ஆரிக்கு சிறிய கம்பி குத்தியதில் லேசான காயம் இருந்தது. இந்த நிலையில் மோட்டார் ஸ்விட்ச்சை ஏன் போட்டீர்கள் என கேட்ட போது அதிகாலை நேரத்தில் வீடு இருட்டாக இருந்ததால் லைட் போடுவதற்கு பதிலாக தவறுதலாக மோட்டார் ஸ்விட்சை போட்டுவிட்டதாக தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications