ED அழைத்ததும் தைரியமாக சென்ற பொன்முடி! அப்பாவை பத்திரமாக கூட்டிட்டு போங்க.. பின்னாடியே ஓடி வந்த மகன்
சென்னை: அப்பாவை பத்திரமாக கூட்டிட்டு போங்க என கூறியபடியே பின்னால் ஓடி வந்த மகனால் உருக்கமான சம்பவம் நடந்தது.
தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் வீட்டில் நேற்று காலை 7.30 மணிக்கு அமலாக்கத் துறை சோதனை தொடங்கியது. இது இன்று விடிய விடிய நடந்தது. சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான 9 இடங்களில் இந்த சோதனை நடந்தது.

அவருடைய மகன் கவுதம சிகாமணியின் வீட்டிலும் ரெய்டு நடந்தது. சென்னை சைதாப்பேட்டை மற்றும் விழுப்புரம் சண்முகபுரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடுகளில் சோதனை நடந்தது. விழுப்புரம் விக்கிரவாண்டியில் உள்ள சூர்யா அறக்கட்டளைக்கு சொந்தமான பொறியியல் கல்லூரியிலும் இந்த சோதனை நடந்தது.
துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள பொன்முடி இல்லத்திற்கு வந்த தடயவியல் துறை நிபுணர்கள், ஆவணங்கள் ஏதும் அழிக்கப்பட்டுள்ளனவா என ஆய்வு செய்தனர். இந்த சோதனையின்போது, அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் ரூ.70 லட்சம் மதிப்பிலான இந்திய ரூபாய் உள்பட மொத்தம் ரூ.80 லட்சத்தை அமலாக்கத் துறையினர் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இந்தப் பணம் குறித்து அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத் துறை கேள்வி எழுப்பிய நிலையில் அதற்குரிய விளக்கத்தை அவர் கூறவில்லை என தெரிகிறது. இதையடுத்து அந்த பணத்தை அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் நள்ளிரவு பொன்முடியிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.
அப்போது அவரது வயது, உடல்நலத்தால் கவலைக்கொண்ட மகன் அசோக் சிகாமணி அப்பாவின் பின்னாலேயே ஓடி வந்தார். பின்னர் அப்பாவை பத்திரமாக கூட்டிட்டு போங்க என தெரிவித்தார். வழக்கமாக மிசாவை பார்த்தவர்கள் திமுகக்காரர்கள் என சொல்லிக் கொள்வார்கள். அது போல் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு பொன்முடி சிறிதும் அஞ்சாமல் உடன் சென்றார். ஆனால் அவருடைய மகன்தான் அஞ்சினார். அவரது முகத்தில் ஒரு விதமான அச்சம் நன்றாகவே தெரிந்தது. வயதானவர், உடல்நல பிரச்சினைகளை கொண்ட தந்தையை எண்ணி அசோக் மிகவும் கவலையுற்றார்.
பொன்முடியை அழைத்து சென்ற வாகனத்தை பல திமுக தொண்டர்கள் தடுத்து நிறுத்த முயற்சித்தனர். ஆனால் அவர்களை எல்லாம் பொன்முடியும் அவருடைய மகனும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். செந்தில் பாலாஜிக்கு அடுத்து பொன்முடி அமலாக்கத் துறையினரால் குறி வைக்கப்பட்டுள்ளது. இந்த 2 சம்பவங்களுமே முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் இல்லாத போது நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications