ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. எனது இளைய மகனுக்கு வாய்ப்பு கேட்டுள்ளேன்.. ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி!
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட என் இளைய மகன் சஞ்சய்-க்கு வாய்ப்பு வழங்க கேட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்று கூறியுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன், இளைஞர் ஒருவருக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் யார் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதனிடையே ஈவிகேஸ் இளங்கோவன் அல்லது அவரது இளைய மகனான சஞ்சய் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் பாமக போட்டியிடாது! எந்தக் கட்சிக்கும் ஆதரவு கிடையாது! அன்புமணி அறிவிப்பு!
மகனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?
இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் நான் போட்டியிடவில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். ஆனால் என் குடும்பத்தில் இருந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் இளைய மகன் சஞ்சய்-க்கு வாய்ப்பு வழங்க கேட்டுள்ளேன்.
ஓரிரு நாட்களில் வேட்பாளர் அறிவிப்பு
காங்கிரஸ் தலைமை யாரை வேட்பாளராக அறிவித்தாலும் ஏற்பேன். இளைஞர் ஒருவருக்கு தான் காங்கிரஸ் தலைமை வாய்ப்பு வழங்க வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேறு சிலரும் வாய்ப்பு கேட்டுள்ளனர். அனைத்தையும் பரீசிலித்து காங்கிரஸ் கட்சி மேலிடம் முடிவு எடுக்கும். இன்னும் ஓரிரு நாட்களில் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படுவார். இந்தத் இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றிபெறுவோம் என்று தெரிவித்தார்.
திமுக ஆட்சி
தொடர்ந்து, திமுக ஆட்சியமைத்து சுமார் இரண்டு ஆண்டுகளில் ஏராளமான சாதனைகளை படைத்துள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளாக ஒருநாள் கூட ஓய்வெடுக்காமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உழைத்து வருகிறார். மத்திய அரசு தமிழ்நாட்டில் இந்தியை திணிக்கும் போதெல்லாம் மாபெரும் போர் வீரராக மு.க.ஸ்டாலின் எழுந்து நிற்கிறார். ஆளுநர் ஆர்.என்.ரவி செய்யும் மோசமான செயல்பாடுகளை எதிர்த்து திமுக செயல்படுவது மக்களிடையே நல்ல பெயரை கொடுத்துள்ளது. ஏற்கனவே திமுகவினர் களப்பணியை தொடங்கியுள்ளனர். அதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
பாஜக ஒரு வெத்துவேட்டு
தொடர்ந்து பாஜக பற்றிய கேள்விக்கு, பாஜக ஒரு ஊதி பெரிதாக்கப்பட்ட பலூன். தமிழ்நாட்டின் 3வது பெரிய கட்சி என்று பாஜக சொல்வது மிகப்பெரிய பொய். மூன்றாவது இடம் என்பது காங்கிரஸ் கட்சிக்கு தான். உள்ளாட்சித் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளனர். அகில இந்திய கட்சியாக இருக்கும் பாஜக, தமிழ்நாட்டில் ஒரு மாவட்ட கட்சியாக மாறிவிட்டது. அதனால் அண்ணாமலை அதிக சத்தங்களை எழுப்பி வருகிறார். அண்ணாமலையும், பாஜகவும் வெத்துவேட்டு என்பது இடைத்தேர்தல் மூலம் தெரிய வரும் என்று தெரிவித்தார்.