ஆடு பகை, குட்டி உறவு டெக்னிக்! ஆம்ஸ்ட்ராங்கை அங்கிள் அங்கிள் என அழைத்து கொலை! அஸ்வத்தாமன் பரபரப்பு
சென்னை: எனது தந்தைக்கும் உங்களுக்கும்தான் முன்விரோதம், நான் என்ன செய்தேன் என கேட்டு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை , ரவுடி நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமன் உறவு கொண்டாடியதாக போலீஸார் வாக்குமூலதக்தில் அவர் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5ஆம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருக்கே கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக ஆரம்பத்தில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் ரவுடி திருவேங்கடம் போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் திமுக, அதிமுக, பாஜக, தமாகா கட்சிகளைச் சேர்ந்தவர்கள், வழக்கறிஞர்கள், ரவுடிகள் என இந்த வழக்கில் அடுத்தடுத்து சிக்கியுள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 5 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அது போல் இதுவரை 23 பேர் வரை கைது ஆகியுள்ளனர். இவர்களை போலீஸார் ஒவ்வொருவராக காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது போலீஸ் காவலில் பிரபல ரவுடி நாகேந்திரன், அவரது மகனும் முன்னாள் காங்கிரஸ் நிர்வாகி வழக்கறிஞர் அஸ்வத்தாமன் உள்ளனர்.
இவர்களிடம் தனித்தனியாகவும் நேருக்கு நேர் வைத்தும் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது அவர்கள் அளிக்கும் வாக்குமூலங்கள் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த விசாரணையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் சில தகவல்கள் கிடைத்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கிறார்கள்.
அந்த தகவல்களை அடிப்படையாக வைத்தே அடுத்த கட்ட நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவிக்கிறார்கள். இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வரும் சம்போ செந்தில் என்பவரை போலீஸார் தேடி வருகிறார்கள். அவர் தாய்லாந்தில் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவரை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அது போல் ரவுடி நாகேந்திரன் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் அஸ்வத்தாமனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளாராம். அதாவது ஆம்ஸ்ட்ராங்குடன் இணக்கமான சூழலை கடைப்பிடித்துள்ளார்.
அவரிடம் போய் "உங்களுக்கும் அப்பாவுக்கும்தானே முன் விரோதம். நான் இணக்கமாக செல்ல விரும்புகிறேன்" என்று ஆம்ஸ்ட்ராங்கை அங்கிள் என்றே அழைத்தாராம் அஸ்வத்தாமன். அவருடன் நட்புடன் இருப்பது போல் நடித்ததாகவும் மாமூல் , அரசியல் எதிர்காலம் என அனைத்துமே பூஜ்ஜியம் ஆகிவிடும் என்பதால் நாகேந்திரனிடம் கூறி ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல சொன்னாராம் அஸ்வத்தாமன். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications