காஸ்ட்லி கார், ரூ.20 லட்சம் பணம் கரெக்ட்டா தாலி கட்டும்போது கேட்ட மாப்ளை! மறுநொடி மணப்பெண்ணின் பரிசு
சென்னை: நம்முடைய நாட்டில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் அதிகரித்து கொண்டே போகின்றன.. இதில், முக்கிய காரணங்களில் ஒன்றாக வரதட்சணை கொடுமை உள்ளது. வரதட்சணை வாங்குவதும், கொடுப்பதும் சட்ட விரோதம் என்று தெரிந்திருந்தும், பெரும்பாலான திருமணங்களில் வரதட்சணை வலிய, திணித்து கொடுக்கப்படுகிறது... பல இடங்களில் கட்டாயப்படுத்தி பெறப்படுகிறது. இதோ இப்போது நிகழ்வு உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது.
ஏழைகள் முதல் நடுத்தர மக்கள், பணக்காரர்கள் என பலதரப்பட்டவர்கள், தங்கள் வசதிக்கு தகுந்தவாறு வரதட்சணை கொடுத்தும், பெற்றும் வருகிறார்கள். எனினும், இந்த வரட்சணைகள்தான், ஆயிரம் கனவுகளுடன் கணவனுடன் வாழ்க்கையை ஆரம்பிக்க நினைக்கும், அப்பாவி பெண்களின் உயிரையே பறித்துவிடுகிறது.

இப்படி வரதட்சணை பெறுவதும், கொடுப்பதும் அவரவர் தனிப்பட்ட விஷயம் என்று சிலர் சொன்னாலும், பல்வேறு குற்றச்சம்பவங்களுக்கு காரணமாகி விடுகிறபோது, வரதட்சணை என்பது சமூகப்பிரச்சனையாகவே பார்க்கப்படுகிறது. இதோ உத்தரபிரதேசத்தில் நடந்த ஒரு ஆச்சரியமான சம்பவத்தை பாருங்கள்.
20 லட்சம் பணம், காஸ்ட்லி கார்
உத்தரபிரதேசம் பரேலி மாவட்டத்தின் சதார் பஜார் பகுதியை சேர்ந்தவர்கள் ஜோதி - பாரத்.. இவர்கள் இருவருக்கும் கடந்த வெள்ளிக்கிழமை இரவு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. வடமாநிலங்களில் திருமண சடங்குகள் அதிகமாகவே இருக்கும் அந்த சடங்குகளில் பெரும்பாலும் நடந்து முடிந்தன..
மணமகன் பாரத் ஊர்வலத்துடன் திருமண மண்டபத்திற்கு வந்தார். மணமேடை சடங்குகள் தொடங்க இன்னும் சில நிமிடங்களே இருந்தது.. அப்போது மணமகன் திடீரென "ரூ.20 லட்சம் ரொக்கம், ஒரு கார் கொடுத்தால் தான் தாலி கட்டுவேன்" என்று அதிரடியாக அறிவித்துள்ளார்..
வரதட்சணை கேட்ட மாப்பிள்ளை
இதை பெண்ணின் வீட்டினர் உட்பட மண்டபத்தில் யாருமே எதிர்பார்க்கவில்லை..மணப்பெண் வீட்டில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. ஏற்கனவே திருமணத்திற்காக பல லட்சங்கள் செலவழிக்கப்பட்டிருந்த நிலையில், மணமகளின் அப்பா, மாப்பிள்ளையிடம் சென்று தன் மகளின் வாழ்க்கைக்காக கெஞ்சினார்..
ஆனால் மாப்பிள்ளையோ, "எனக்கு பணம்தான் முக்கியம்" என்றே மணமகன் பிடிவாதமாகவும், கறாராகவும் சொன்னார்.. தன்னுடைய குடும்பத்தினரை அவமானப்படுத்தி வரதட்சணை கேட்பதை கண்டு மணமகள் ஜோதி ஆவேசமானார்..
திடீரென அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் முடிவை எடுத்தார்.. "வரதட்சணை பேராசை பிடித்த ஒருவருடன் என்னால் வாழ முடியாது. என் குடும்பத்தை அவமானப்படுத்திய ஒருவரை நான் என் வாழ்க்கைத் துணையாக ஏற்க மாட்டேன்" என்று சொல்லி, கல்யாணத்தை நிறுத்த சொன்னார்..
அதுமட்டுமல்ல. தன்னுடைய அப்பாவின் கையை பிடித்து, அவர் திருமண மண்டபத்தை விட்டும் வெளியேறினார்.. மண்டபத்தில் அந்தக் காட்சி பலரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. பிறகு இந்த விவகாரம் போலீஸ் வரை சென்றது..
கடைசி நேரத்தில் ட்விஸ்ட்
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மணமகன் மற்றும் அவரது உறவினர்களிடம் விசாரணையை நடத்தி வருகிறார்கள்.. இதுதொடர்பாக முறையான புகார் கிடைத்த பின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஆனால், கல்யாணம் நிச்சயிக்கப்பட்டபோது வரதட்சணை வேண்டாம் என்று மணமகன் வீட்டில் சொன்னார்களாம்.. கடைசி நேரத்தில் பேராசையை காட்டி விட்டார்கள்.. இது எங்களுக்கு அதிர்ச்சியை தந்துவிட்டது என்று பெண் வீட்டினர் குற்றஞ்சாட்டுகிறார்கள்..
வரதட்சணை என்ற சமூகத் தீமையை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியதோடு, அதை எதிர்த்து நிற்க பெண்களுக்கும் குடும்பங்களுக்கும் தைரியம் தரும் உதாரணமாக மாறியிருக்கிறது..
வீடியோ சபாஷ்
மாப்பிள்ளை வரதட்சணை கேட்டதுமே, தன்னுடைய அப்பாவை கையை பிடித்து கொண்டு, ஆவேசமாக மண்டபத்தை விட்டு பெண் வெளியேறும் வீடியோவானது, சோஷியல் மீடியாவிலும் பரவி, லட்சக்கணக்கானோரின் லைக்ஸ்களை பெற்று வருகிறது.
"இது உண்மையான பெண் அதிகாரம்", "திருமணத்தை விட சுயமரியாதை முக்கியம்" போன்ற கருத்துகளை இணையவாசிகள் பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்...!!












Click it and Unblock the Notifications