காலில் விழுந்தும் விடவில்லை.. வட மாநில வாலிபர்கள் மீது சரமாரி தாக்குதல்.. தேமுதிக பிரமுகர் கைது
சென்னை: சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே வாடகை பாக்கி தராமல் செல்ல முயன்ற வடமாநில வாலிபர்களை சரமாரியாக தாக்கிய தேமுதிக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சஞ்சய்குமார் சாகு(32), இவர் தனது சகோதரர் பிரதாப் சாகு என்பவருடன் குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கத்தில் தங்கி தனியார் நிறுவனங்களுக்கு வடமாநில வாலிபர்களை சப்ளை செய்யும் நிறுவனம் நடத்தி வந்துள்ளனர்.
இங்கு பணிபுரியும் 30 க்கும் மேற்பட்ட வட மாநிலத் தொழிலாளர்களை தேமுதிக, காஞ்சிபுரம் மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் சுரேஷ்ராஜ்(40), என்பவர் வீட்டில் வாடகைக்கு தங்க வைத்திருந்ததாகவும் கடந்த மூன்று மாதங்களாக வாடகை பாக்கி ரூ.2 லட்சத்து 85 ஆயிரம் பணம் தர வேண்டி இருந்துள்ளது.

வடமாநில வாலிபர்கள்
கொரோனா ஊரடங்கு காரணமாக வடமாநில வாலிபர்கள் சொந்த ஊருக்கு கிளம்பி செல்வதை அறிந்து கொண்டு சுரேஷ் ராஜ் நேற்று இரவு வீட்டிற்குள் சென்று வடமாநில வாலிபர்களை பிளாஸ்டிக் பைப்பால் சரமாரியாக அடித்து உதைக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது

காலில் விழுந்தார்
இதில் வடமாநில வாலிபர்களை முட்டி போட வைத்தும், உடலில் சட்டை போடாமலும் சரமாரியாக அடித்து உதைக்கும் காட்சிகள் வேகமாக பரவியது. வலி தாங்க முடியாமல் அந்த வாலிபர்கள் வலியால் துடித்து காலில் விழும்போதும் விடாமல் அடித்து உதைக்கும் காட்சிகள் வெளியானது.

குன்றத்தூர் போலீசார்
இதையடுத்து குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சந்துரு, சப்-இன்ஸ்பெக்டர் அந்தோனி சகாய பாரத் ஆகியோர் தலைமையில் விரைந்து சென்ற போலீசார் சுரேஷ்ராஜை கைது செய்து விசாரணை செய்தபோது வடமாநில வாலிபர்களை சரமாரியாக அடித்து தாக்கியது தெரியவந்தது.

தேமுதிக பிரமுகர் கைது
இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். வாடகை பாக்கி தராமல் சொந்த ஊருக்கு செல்ல முயன்ற வட மாநில வாலிபர்களை தேமுதிக பிரமுகர் சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications