திருவான்மியூர் ஆறுபடை முருகன் கோவில் எதிரில் 'பட்டா' போட பார்த்த கும்பல்.. மாநகராட்சி மாஸ் சம்பவம்
சென்னை: சென்னை திருவான்மியூர் குப்பம் ஆறுபடை முருகன் கோவிலுக்கு எதிரில் கடற்கரை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டுமான பணியினை மாநகராட்சி அதிகாரிகள் தடுத்து நிறுத்தி உள்ளனர். போலீஸ் பாதுகாப்புடன், கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது..
சென்னை மாநகரில் யார் எங்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தாலும் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றுவார்கள். அத்துடன் ஆக்கிரமிப்புகள் செய்கிறவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைக்காக போலீசில் புகாரும் அளிப்பார்கள். சென்னையில் இப்படி ஆக்கிரமிப்புக்கு உள்ளாக முயன்ற ஏராளமான நிலங்களை மீட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நிலத்தின் மதிப்பு கோடிகளில் இருக்கிறது. சென்னையில் பெரும்பாலான இடங்களில் காலியிடங்களே இல்லை.. அப்படியே இருக்கும் ஒரு காலியிடங்கள் கடற்கரை பகுதிகள், ஆறுகள், குளங்களை ஒட்டித்தான் உள்ளது. இவற்றை சில அதிகாரத்தின் துணையுடன் ஆக்கிரமிப்பது அடிக்கடி நடக்கிறது.
அப்படி ஆக்கிரமிப்பதை காணும் பொதுமக்கள் சென்னை மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கிறார்கள்.. அவர்கள் நேரில் வந்து ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், அந்த இடம் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என்றும், அத்துமீறுகிறவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை பலகை வைக்கும்.. இப்படித்தான் பல மாநகராட்சி நிலங்கள் பொதுமக்கள் துணையுடன் மீட்கப்பட்டு உள்ளது,
இந்நிலையில் சென்னை திருவான்மியூர் குப்பம் ஆறுபடை முருகன் கோவிலுக்கு எதிரில் கடற்கரை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டுமான பணிகள் நடந்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, சென்னை திருவான்மியூர் குப்பம் ஆறுபடை முருகன் கோவிலுக்கு எதிரில் கடற்கரை புறம்போக்கு இடத்தில் கட்டிடம் கட்டும் நோக்கத்தில் மண்ணை தோண்டி அஸ்திவார பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன், கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டது. மேலும் தோண்டப்பட்ட குழியை ஜேசிபி எந்திரங்கள் மூலம் மணலால் நிரப்பி உடனடியாக சமன் செய்யப்பட்டது. இதன் அருகே ஏற்கனவே ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவர் மற்றும் ஆழ்துளை கிணறு கை பம்பும் அதிரடியாக அகற்றப்பட்டது.
ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருவான்மியூர் குப்பம் ஆறுபடை முருகன் கோவிலுக்கு எதிரில் கடற்கரை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து மேற்கொண்ட கட்டுமான பணியினை மாநகராட்சி அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications