ராமதாஸ் - குருமூர்த்தி மீட்டிங்குக்கும் பாஜகவுக்கும் சம்பந்தம் இல்லை.. சொல்கிறார் நயினார்!
கோவை: ஆடிட்டர் குருமூர்த்தி, ராமதாஸை தனிப்பட்ட முறையில் சந்தித்துள்ளார் என்றும், அதற்கும் பாஜகவுக்கும் தொடர்பு இல்லை என்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், பாமக தலைவர் அன்புமணிக்கும் இடையே கடுமையான பனிப்போர் நிலவி வருகிறது. ராமதாஸின் பேரன் முகுந்தன் இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்டது முதலே இந்த மோதல் வெளிப்படையாக நடந்து வருகிறது. இதற்கிடையே தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் கடந்த 29ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்து, அன்புமணி மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியது.

மேலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதே அதிமுகவுடன் கூட்டணி அமைக்க விரும்பியதாகவும், ஆனால் அன்புமணி தனக்குத் தெரியாமலேயே பாஜகவுடன் கூட்டணி அமைத்ததாகவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருந்தார். அன்புமணிக்கு தலைமைப் பண்பு இல்லை என்றும் கடுமையாக விமர்சித்திருந்தார் ராமதாஸ்.
அதைத்தொடர்ந்து, அன்புமணி, தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார். அன்புமணி ஆதரவு நிர்வாகிகளை ராமதாஸ் பதவி நீக்கம் செய்து வந்தார். அன்புமணி கூட்டிய கூட்டத்திற்குச் சென்ற நிர்வாகிகள், ராமதாஸ் கூட்டத்திற்குச் செல்லாமல் தவிர்த்தனர். இதனால் கடுமையான அப்செட்டில் இருந்து வந்தார் ராமதாஸ்.
இந்நிலையில் இன்று தைலாபுரம் தோட்டத்தில் அன்புமணி, ராமதாஸுடன் சந்திப்பு மேற்கொண்டார். சுமார் 45 நிமிடம் இந்த சந்திப்பு நிகழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் சைதை துரைசாமி ஆகியோரும் ராமதாஸை சந்திக்க தைலாபுரம் வந்தனர்.
இதனால் அதிமுக - பாஜக கூட்டணியில் பாமக மீண்டும் இணைய வாய்ப்பு உள்ளதா? பாஜக தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் ஆடிட்டர் குருமூர்த்தி ராமதாஸை சென்று சந்தித்தாரா என்ற பேச்சுக்கள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
இந்நிலையில் ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோர் ராமதாஸை தனிப்பட்ட முறையில் சந்தித்துள்ளனர் என்றும், அதற்கும் பாஜகவுக்கும் தொடர்பு இல்லை என்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், "மதுரையில் கால் பதிக்க வேண்டும் என்பதற்காகவே வரும் ஜூன் 8 ஆம் தேதி அமித்ஷா வருகிறார். முருக பக்தர்கள் மாநாட்டில் ஒலிக்கும் குரல் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் எதிரொலிக்கும். அனைவரும் ஓரணியில் இணைந்து திமுக அரசைத் தோற்கடிக்க வேண்டும் என்பதே நிலைப்பாடு. தவெக தலைவர் விஜய்க்கும் இதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது." என்றார்.
குருமூர்த்தி ராமதாஸ் உடன் இன்று சந்திப்பு மேற்கொண்டது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், "ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோர் ராமதாஸை தனிப்பட்ட முறையில் சந்தித்துள்ளனர். அதற்கும் பாஜகவுக்கும் தொடர்பு இல்லை." என்றார்.
முன்னதாக, ராமதாஸை சந்தித்துவிட்டு வெளியே வந்த ஆடிட்டர் குருமூர்த்தியிடம், பாஜகவுக்காக சந்திப்பு நடந்ததா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அவர், "பாஜகவுக்காக நான் வரவில்லை. அவர் என் நீண்ட நாள் நண்பர். அதன் அடிப்படையில் அவரைச் சந்தித்தேன். அன்புமணி இங்கு வந்ததே எனக்குத் தெரியாது. பிரச்சனை இருக்கும் இடத்திற்கு நான் வரவில்லை. நான் இருக்கும் இடத்தில் பிரச்சினை வந்துவிடுகிறது என நினைத்துக்கொள்ளுங்கள்" எனக் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications