சசிகலா அண்ணன் மகன்.. விவேக் காளையை அடக்கிய வீரர்.. தங்க மோதிரம் பரிசளித்த உதயநிதி ஸ்டாலின்
காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு இன்றைய தினம் ஏராளமான தங்கக் காசுகள் பரிசாக வழங்கப்பட்டன.
சென்னை: ஜெயாடிவியின் சிஇஓ சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமனின் காளையை அடக்கிய மாடு பிடி வீரருக்கு உதயநிதி சார்பில் அரை பவுன் தங்க மோதிரம் பரிசளிக்கப்பட்டது. அதே நேரத்தில் உதயநிதி ஸ்டாலின் காளை பிடிபட்டாலும் வீரர்கள் தூக்கி வீசி விட்டு ஓடி வெற்றி பெற்றது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப்போட்டிகள் கோலகலமாக நடந்து முடிந்துள்ளன. பொங்கல் பண்டிகை நாளன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் பங்கேற்ற காளைகளுக்கும், மாடுகளை அடக்கிய வீரர்களுக்கும் தங்க நாணயங்கள், பீரோ, சேர், கட்டில் போன்ற பொருட்கள் பரிசாக அளிக்கப்பட்டன.
வாடி வாசலை விட்டு வெளியே வரும் காளைகளைப் பற்றியும் அவற்றின் உரிமையாளர்கள் பற்றியும் வர்ணணையாளர்கள் அறிவிப்பார்கள். காளைகள் முரட்டுத்தனமாக பாய்ந்தால் தொட்டுப்பார்... நெருங்கு பார்ப்போம் என்றெல்லாம் அழகாக வர்ணித்து ஜல்லிக்கட்டு போட்டியை சுவாரஸ்யப்படுத்தினர்.
எதிர்பாராத ட்விஸ்ட்.. சென்னை உட்பட 11 மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு.. துணிச்சலான முடிவு!
விவேக் ஜெயராமன் காளை
இதே போல அழகான திமிலை கொண்ட ஒரு காளை ஒன்று வாடி வாசலை விட்டு வெளியே வர காத்திருந்தது. அந்த காளையைப் பற்றி கூறிய விழாக்குழுவினர், ஜெயாடிவி சிஇஒ விவேக் ஜெயராமன் மாடு என்று தெரிவித்தார். அமைச்சர் மூர்த்தி சார்பில் பீரோ ஒன்று பரிசளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. உடனே அந்த காளையை பிடிக்க ஆர்வம் அதிகரித்தது. போட்டி போட்டிக்கொண்டு இளைஞர்கள் வாடி வாசலை நெருங்கினர்.
உதயநிதி தங்க மோதிரம்
அதே நேரத்தில் சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் சார்பில் அரைபவுன் மோதிரம் பரிசாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. வாடி வாசலை விட்டு காளை வெளியே வந்ததும் ஒரு இளைஞர் தைரியமாக காளையின் திமிலை பிடித்து சுற்றினார். சிறுவன் போல காட்சியளித்த அந்த இளைஞர் காளையின் திமிலை பிடித்து மூன்று முறை சுற்றினார். மாடு பிடிபட்டதாக அறிவிக்கப்பட்டு தங்க மோதிரம், பீரோ பரிசளிக்கப்பட்டது.
டிடிவி தினகரன் காளை
அதே நேரத்தில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப்போட்டியில் கலந்து கொண்ட விகே சசிகலா, டிடிவி தினகரன் காளைகள் யாருடைய கைகளுக்கும் சிக்காமல் ஓடி விட்டது. இதனால் மாட்டின் உரிமையாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு தங்க நாணயம் பரிசளிக்கப்பட்டது.
உதயநிதி ஸ்டாலின் காளை
அதே நேரத்தில் உதயநிதி ஸ்டாலின் காளை வாடி வாசலை விட்டு வெளியே வந்த போது, பீரோ, அண்டா, கிப்ட் பேக், ஹேண்ட் பேக் பரிசளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அப்போது வர்ணணையாளர்கள் நெருங்கி வா... தொட்டுப்பார் என்று விழாக்குழுவினர் அறிவித்து சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தினர். அப்போது காளையின் திமிலை ஒருவர் பிடிக்க மாடு தூக்கிப்போட்டு விட்டு ஓடியது. இதனால் மாடு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு பரிசளிக்கப்பட்டது.