"டிராவிட்+ 10 வருடம்.." பணத்தை பல மடங்காக்கும் சூட்சுமமே இதுதான்.. ஆனந்த் சீனிவாசன் தந்த ஈஸி ஐடியா
சென்னை: நாம் அனைவருக்கும் பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும். பணக்காரர் ஆக வேண்டும் என்றால் பணத்தைச் சேமித்தால் மட்டும் போதாது. மாறாகச் சரியாக முதலீடு செய்வதும் அவசியம்.. ஆனால் பலரும் கோட்டை விடுவது இதில் தான். இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் எளிதாக இது குறித்து விளக்கி இருக்கிறார். அது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இங்கே பலரும் கஷ்டப்பட்டு வேலை செய்து சம்பாதித்தாலும், அதை எப்படிச் சேமிக்க வேண்டும்.. எப்படிச் சரியாக முதலீடு செய்ய வேண்டும் என்பது தெரிவதில்லை. இதனாலேயே காலம் முழுக்க கஷ்டப்பட்டு உழைத்துக் கொண்டே இருக்க வேண்டி இருக்கிறது.

ஆனால், சரியான சேமிப்பு+ சரியான முதலீட்டைச் சரியான நேரத்தில் செய்தால் பணக்காரர் ஆவது அவ்வளவு கடினம் எல்லாம் இல்லை. இதற்கிடையே இதுபோல எளிமையாகப் பணக்காரர் ஆவது எப்படி என்பதைப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் சேனலில் விளக்கியுள்ளார்.
விஷயம் என்ன: அதாவது அவர் கூறுகையில், "நீண்ட கால முதலீட்டில் நாம் பெரிய பெரிய வெற்றி நிறுவனங்கள் பின்னால் செல்வதை விட நஷ்டத்தைக் குறைப்பதிலேயே கவனம் செலுத்த வேண்டும். அதாவது மிகப் பெரிய லாபம் தரும் நிறுவனத்தைத் தேடிக் கண்டுபிடித்து முதலீடு செய்வதைக் காட்டிலும் சந்தை சராசரியை விடக் கொஞ்சம் அதிகம் லாபம் தரும் நிறுவனங்களைக் கண்டறிந்தால் போதும். இதையே நீங்கள் பல ஆண்டுகள் தொடர்ந்து செய்தால் நீண்ட கால நோக்கில் அதிக லாபம் அடையலாம். இதைத் தான் பிரபல சர்வதேச முதலீட்டாளர் ஹோவர்ட் மார்க்ஸ் செய்து வந்தார்.
எது சரி: உங்கள் முதலீட்டில் நஷ்டமடையும் நிறுவனங்களைக் குறைப்பதே இலக்காக இருக்க வேண்டும். முதலீட்டில் நஷ்டமே இல்லாமல் எல்லாமே வின்னர் என்றால் போதும்.. அந்த இடத்தில் எவ்வளவு தூரம் வெற்றி என்பது முக்கியம் இல்லை. அதாவது நீங்கள் 10 நிறுவனங்களில் முதலீடு செய்து இருக்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அதில் 2 நிறுவனங்களில் இருந்து மட்டும் ரூ.100 சம்பாதித்து இருக்கிறீர்கள், ஆனால் மற்ற 8 நிறுவனங்களில் தலா ரூ.10 நஷ்டம் என்றாலும் அது ரூ.80.. இதுபோல நடந்தால் உங்கள் மொத்த லாபம் வெறும் ரூ.20தான்.
அதேநேரம் 10இல் 9 சரியான நிறுவனத்தில் முதலீடு செய்து இருந்தால் போதும். அதில் ஒவ்வொன்றிலும் ரூ.10 லாபம் கிடைத்து, கடைசி பங்கில் ரூ.10 நஷ்டம் என்றாலும் ஒட்டுமொத்தமாக உங்களுக்கு ரூ.80 லாபமாக இருக்கும். இதுவே இதன் அடிப்படை. ஒவ்வொரு நிறுவனத்தின் லாபம் குறைவு என்றாலும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது இது நல்ல லாபமாகவே இருக்கும்.
10 ஆண்டுகள்: இதையே நீங்கள் தொடர்ந்து 10 ஆண்டுகள் செய்தால் போதும். தனித்தனியாக ஒவ்வொரு ஆண்டும் பார்த்தால் உங்கள் லாபம் கம்மியாக இருப்பது போலத் தோன்றும். ஆனால், ஒட்டுமொத்தமாக 10 ஆண்டுகளைச் சேர்த்துப் பார்த்தால் அது மிகப் பெரிய லாபமாக இருக்கும். உலகின் பல முக்கிய முதலீட்டாளர்கள் இதே தான் பின்பற்றியுள்ளனர்.
திராவிட்: அதாவது ராகுல் திராவிட் மாதிரி நாம் இருக்க வேண்டும். அவர் ஒரு போட்டியில் 60 பந்துகளை ஆடிய பிறகே முதல் ரன்னை அடிப்பார். 60 பந்துகளைப் பிடிப்பது எல்லாம் சாதாரண விஷயம் இல்லை. நமது வாழ்க்கை ஒரு டெஸ்ட் மேட்ச் போலத் தான். முதலீட்டில் நின்று பொறுமையாக விளையாட வேண்டும். பொறுமையாகக் காத்திருந்து எத்திரணிகளை டயர்ட் ஆக்கிய பிறகு அடிப்பதே டிராவிட் ஸ்டைல். முதலீட்டில் அதேபோலத் தான்.. நீங்கள் எவ்வளவு வின்னர்களை அடிக்கிறீர்கள் என்பது முக்கியம் இல்லை.. எவ்வளவு தூரம் குறைவாக தவறை செய்கிறீர்கள் என்பதே மேட்டர்" என்று அவர் தெரிவித்தார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications