பொய்கணக்கு காட்டி அதிமுக அரசு அவார்ட்? இறந்தவர்களை ‘மறைத்ததாக’ புகார்! விருது பறி போக வாய்ப்பு?
சென்னை : இந்தியாவிலேயே சாலை விபத்துகள் குறைந்து காணப்படும் முதல் மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டு விருது அளிக்கப்பட்ட நிலையில், அதிமுக ஆட்சியில் நடந்த தவறு காரணமாக 4 ஆண்டுகளில் சாலை விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரம் குறைத்து காட்டியது தற்போது நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
2016ஆம் ஆண்டு முதல் 34% சாலை விபத்துக்களை தவிர்த்ததோடு 54% சாலை விபத்தில் இறப்பவர்களை தடுத்து, இந்தியாவிலே சாலை விபத்துகள் குறைந்து காணப்படும் முதல் மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டது.
இதற்காக தமிழக அரசுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் சார்பில் விருந்து வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு விருது
தமிழகத்திற்கு கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் விருது வழங்கிப் பேசிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, சாலை விதிகள் பற்றியும் விபத்துகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் தமிழகம் முன்னுதாரணமான மாநிலமாக உள்ளது என்று குறிப்பிட்டு இருந்தார். அப்போதைய அதிமுக அரசு சார்பில் அமைச்சர்கள் விருதினை டெல்லியில் நடைபெற்ற விழாவில் பெற்றுக் கொண்டனர்.
அதிமுக ஆட்சி
இந்நிலையில் அதிமுக ஆட்சியில் நடந்த தவறு காரணமாக 4 ஆண்டுகளில் சாலை விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரம் குறைத்து காட்டியது தற்போது நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. சாலை பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்டதற்காக அதிமுக ஆட்சிக்காலத்தில் கடந்த 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் தமிழக அரசுக்கு சிறப்பு விருது கிடைத்தது. ஆனால் 2017ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் நடந்த சாலை விபத்தில் இறந்தவர்கள் தொடர்பான தரவுகளை மீண்டும் ஆய்வு செய்யப்பட்டது.
பலியானவர்கள் எண்ணிக்கை
அந்த 4 ஆண்டுகளில் மட்டும் ஏற்கனவே காட்டப்பட்டுள்ள விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கையை விடவும் 22 ஆயிரத்து 18 பேர் கூடுதலாக மரணம் அடைந்துள்ளனர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கோர விபத்து காரணமாக 2017ஆம் ஆண்டு 16 ஆயிரத்து 157 பேர் மரணம் என காட்டப்பட்டிருந்த நிலையில், அது 17 ஆயிரத்து 926 ஆகவும், 2018ஆம் ஆண்டு 12 ஆயிரத்து 216 நடந்ததாக குறிப்பிடப்பட்டு இருந்த நிலையில், அது 18 ஆயிரத்து 394 ஆகவும், 2019ஆம் ஆண்டு 10 ஆயிரத்து 525 விபத்துகள் அரங்கேறியதாக கூறிய நிலையில், அது 18 ஆயிரத்து 129 ஆகவும் பதிவாகியிருக்கிறது.
சாலை விபத்துகள்
ஒட்டுமொத்தமாக சாலை விபத்துகள் மட்டும் 2017ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான 4 ஆண்டுகளில் 12 சதவீதத்தில் இருந்து 83 சதவீதமாக தமிழகத்தில் உயர்ந்துள்ளது தெரியவந்து இருக்கிறது. 2017ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான 4 ஆண்டுகளில் சாலை விபத்துகள் மற்றும் அதனால் ஏற்பட்ட பலி தொடர்பாக பதிவு செய்யப்பட்டிருந்த தரவுகளில் பிழைகள் காணப்பட் டன. அந்த தவறை சரிசெய்து பார்த்தபோது, விபத்துகள் மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தரவுகளில் வேறுபாடு காண்பிப்பதற்காக நாங்கள் வழக்கமாக ஆய்வு செய்து பார்த்தபோது இந்த தவறுகள் கண்டறியப்பட்டுள்ளது.
விருது வாபஸ்
புதிய ஆய்வின்படி அதிகரித்த வழக்கமான நடைமுறைப்படி, ஒவ்வொரு வழக்கையும் ஆய்வு செய்தபோது இந்த வேறுபாடு தெரியவந்துள்ளது. சாலை விபத்துகள் மற்றும் அதனால் நிகழ்ந்த மரணம் தொடர்பான புதிய தரவுகள் மாநில அரசுக்கும், தேசிய குற்ற ஆவண காப்பகத்துக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளன என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால், சாலை விபத்துகள் மற்றும் அதனால் நிகழ்ந்த இறப்புகளை கணிசமாக குறைத்ததற்காக தமிழக அரசுக்கு 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் தேசிய அளவில் வழங்கப்பட்ட விருதுகள் திரும்பப் பெறப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.