ஆயுத பூஜை கொண்டாட்டம்: சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னை: ஆயுத பூஜை கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அக்டோபர் 4, 5-ந் தேதிகளில் ஆயுத பூஜை, மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. முன்னதாக அக்டோபர் 1-ந் தேதி சனிக்கிழமை அரசு விடுமுறைநாள் அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தி. மேலும் அக்டோபர் 1 முதல் அக்டோபர் 10 வரை மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி 5 நாட்கள் தொடர் விடுமுறைகள் கிடைத்துள்ளதால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊர் செல்கின்றனர்.

தொடர் விடுமுறைக்காக பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதால் பேருந்துகளில் எப்போதும் கூட்டம் அலைமோதும்; தனியார் பேருந்துகளில் மிக அதிகமான கட்டணங்கள் வசூலிக்கப்படும். இதனை ஒழுங்குபடுத்த அரசு சிறப்பு பேருந்துகளை முன்கூட்டியே இயக்குவது வழக்கம். இந்த ஆண்டு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் பல்வேறு நகரங்களில் இருந்து இயக்கப்படுகிறது.
சென்னையில் இருந்து நாள்தோறும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 2,050 சிறப்புப் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படும். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிறுத்தம், பூவிருந்தவல்லி புறவழிச்சாலை பணிமனை ஆகிய இடங்களில் இருந்து இந்தப் பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல பேருந்துகளில் இதுவரை சுமார் 47,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிறுத்தத்தில் இருந்து திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை , போளூர், வந்தவாசி; செஞ்சி வழியாக செல்லும் பேருந்துகள்; திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள்; திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
பூவிருந்தவல்லி புறவழிச்சாலை பணிமனை அருகில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி , திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதர அனைத்து நகரங்களுக்கும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications