அழகிரி மகளின் அடுத்த மூவ்! தவெகவில் கருணாநிதியின் பேத்தி? திமுகவுக்கு இனிதான் சிக்கல்?
சென்னை: கலைஞர் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு முக்கியப் பெண் பிரபலம், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய போவதாக பரவி வரும் செய்தி, மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு, ஆளும் தரப்பிற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே நிலவி வரும் அரசியல் போட்டியில் ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கியுள்ளது. என்ன நடக்கிறது மதுரையில்? கருணாநிதி பேத்தியால் அடுத்து நடக்க போகும் அரசியல் அதிர்வுகள் என்னென்ன? விளைவுகள் எப்படி இருக்கும்? இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
தமிழகத்தின் 12-வது முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்பு விழாவில் திமுகவின் முன்னாள் தென்மண்டல அமைப்பாளர் மு.க. அழகிரியின் மகளான கயல்விழி கலந்துகொண்டார்.

அழகிரியின் மகள் கயல்விழி
மறைந்த முன்னாள் திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதியின் குடும்பத்தில் இருந்து, ஒருவர் வந்து கலந்துகொண்டது பரபரப்பாக பேசப்பட்டது. நட்பு ரீதியாகவும், அழைப்பின் பேரிலும் இந்த விழாவில் கயல்விழி கலந்து கொண்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால், இப்போது அடுத்தக்கட்டமாக கயல்விழீ விரைவில் தவெகவில் இணையப்போவதாகவும் கூறப்படுகிறது.
தவெகவின் வளர்ச்சிப் பணிகளிலும், தமிழக மக்களுக்கான சமூக நீதிப் பணிகளிலும் தனது முழுமையான பங்களிப்பை வழங்கப்போவதாக கயல்விழி உறுதி தந்துள்ளதாகவும் தகவல்கள் வலம் வருகின்றன.. அதிலும் உள்ளாட்சித் தேர்தலைக் கருத்தில் கொண்டு கயல்விழி தீவிரமாகச் செயல்படுவதாகவும், குறிப்பாக, மதுரை மாநகராட்சியின் மேயர் பதவியை அவர் குறிவைத்திருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பாகப் பேசப்படுகிறது.
தவெகவில் அழகிரி மகள்
ஒருவேளை கயல்விழி தவெகவுக்குள் இணைவதானால், இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் தவெகவின் செல்வாக்கு மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த பெண், தவெகவின் கட்சியின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் மீது ஈர்க்கப்பட்டு, தானாக முன்வந்து அக்கட்சியில் இணைவது திமுகவுக்கு இது பலவித நெருடலை ஏற்படுத்தக்கூடும் என்றே தெரிகிறது.
காரணம், கலைஞர் இருந்தவரை, மு.க.அழகிரியின் கோட்டையாக மதுரை விளங்கிவந்தது. பிறகு அழகிரியின் ஆதரவாளர்கள் பலர் மு.க.ஸ்டாலின் பக்கம் திரும்பிவந்தனர்.. எனினும், மு.க. அழகிரியை மீண்டும் கட்சியில் இணைத்திருந்தால் திமுக இவ்வளவு பலவீனமடைந்திருக்காது என்ற அதிருப்தி கடந்த 5 வருட காலத்துக்கும் மேலாக நிலவி வருவதையும் நாம் மறுக்க முடியாது.
கயல்விழி - திமுகவுக்கு சவால்
கயல்விழி தவெகவில் இணைவதாக சொல்லப்படுவது குறித்து நாம் சில திமுக நிர்வாகிகளிடம் பேசும்போது, "தென் மண்டலத்தின் அதிகார மையமாகத் திகழ்ந்த அழகிரியிடம் மதுரையை முழுமையாக ஒப்படைத்திருந்தால் கூட்டணிக்குத் தொகுதிகளை விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது, திமுக தலைவர் ஸ்டாலினும், தென் மாவட்டங்கள் குறித்துப் பதற்றமின்றி இருந்திருக்கலாம்..
தொடர்ந்து அழகிரிக்கு வழங்கப்பட்ட ஓரங்கட்டலும், அவரது மகனுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது போன்ற நிகழ்வுகளும் அந்தத் தரப்பினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி விட்டன.. இந்த அதிருப்தியின் உச்சமாகவே, தற்போது கயல்விழி த.வெ.க.வின் பக்கம் நகர்ந்து, தி.மு.க. தலைமைக்குத் தனது அரசியல் செல்வாக்கின் மூலம் சவாலை விடுக்கத் திட்டமிட்டிருக்கலாம் என்கிறார்கள்.
திமுக திருப்தியாளர்கள்
எது எப்படியோ, அழகிரியின் மகள் கயல்விழி த.வெ.க.வில் இணைவது உறுதியாகிவிட்டால், தி.மு.க.வின் வாக்கு வங்கியில், குறிப்பாக மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தலாம்..
நீண்ட காலமாக மதுரையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அழகிரியின் குடும்பத்தினருக்குத் தி.மு.க.வில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வரும் சூழலில், கயல்விழியின் இந்த அரசியல் நகர்வு தி.மு.க.வின் அதிருப்தியாளர்களைத் திரட்டும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
மதுரையின் உள்ளாட்சி அரசியலில் கயல்விழி தீவிரமாகச் செயல்படத் தொடங்கினால், அது திமுக . தலைமையின் பிடியைத் தளர்த்தி, கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்தவும், தென் மண்டலத்தில் தவெகவின் செல்வாக்கை நிலைநாட்டவும் வழிவகுக்கும் என்பதால், திமுக தலைமை இந்த மாற்றத்தை மிகுந்த எச்சரிக்கையுடனும், அதே சமயம் புதிய சவாலாகவும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது.. அடுத்து என்ன நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications