என்னால முடியல.. ஜாமீன் கொடுங்க.. அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணை
சென்னை: நேற்று முன் தினம் உடல் நலக்குறைவு காரணமாக சிறையில் இருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி நேற்று தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்து இருந்தார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், அமலாக்கத் துறையினரால் கடந்த ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரு முறை மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுக்கள் ஜூன் 16 ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 20 ஆம் தேதிகளில் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. ஆனால், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்களை அவர் ஏற்காமல் தள்ளுபடி செய்தார். இந்நிலையில், தொடர்ந்து புழல் சிறையில் இருந்து வரும் செந்தில் பாலாஜிக்கு கடந்த திங்கட்கிழமை காலை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் சக்கர நாற்காலி மூலம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டபோதே செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு இதய அறுவை சிகிச்சையும் நடைபெற்றது. சில வாரங்கள் மருத்துவமனையில் ஓய்வெடுத்த அவர், அதன் பின் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரது உடல் நிலையை சிறை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் தனக்கு ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் மனுத்தாக்கல் செய்தார்.
அதில், உடல் நலக்குறைவால் தாம் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்ததில் இருந்து முழுமையாக குணமடையாத நிலையில் நேற்றும் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டதாக அவர் கூறி இருக்கிறார். திங்கட் கிழமை சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் சிறைக்கு சென்ற நிலையில் சிறையில் இருந்துகொண்டே சிகிச்சை பெறுவதில் சிரமம் உள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டுமென மனுவில் கோரியுள்ளார். மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முறையிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications