பக்ரீத் பண்டிகை! தமிழகம் முழுவதும் சிறப்பு தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
சென்னை: பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகைகளை நடத்தினர்.
இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்தத் தியாகத்திற்கும் தயங்க மாட்டார்கள் என்ற தத்துவத்தைப் பறைசாற்றும் திருநாள்தான் பக்ரீத். ஒவ்வொரு ஆண்டும் துல்ஹஜ் 10ஆம் நாள் இந்த ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகிறது.

பெருநாள் தொழுகை நடந்த பிறகு ஆடு, மாடு, ஒட்டகம் உள்ளிட்டவைகளை பலி கொடுப்பார்கள். இதில் கிடைக்கும் இறைச்சியை 3 பாகங்களாக பங்கு பிரிப்பர். முதல் பாகத்தை தனது குடும்பத்தினருக்கும், 2ஆவது பாகத்தை தனது உறவினர்களுக்கும் 3ஆவது பாகத்தை ஏழை எளியவர்களுக்கும் கொடுப்பது வழக்கம்.
அரபு நாடுகளுக்கு பக்ரீத்தை முன்னிட்டு ஜூன் 15 ஆம் தேதி முதல் ஜூன் 18ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாகூரில் முஸ்லீம் சகோதரர்கள் தொழுகை நடத்தினர். ஜாக் அமைப்பை சேர்ந்த முஸ்லீம்கள் நேற்று பக்ரீத் பண்டிகையை உலகம் முழுவதும் கொண்டாடினர்.
அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் நாகூர் சிலஸ்லடி தர்கா கடற்கரையில் சிறப்புத் தொழுகை நேற்று நடந்தது. இதில் ஏராளமான முஸ்லீம்கள் கலந்து கொண்டனர்.
ஜாக் அமைப்பு சார்பாக நடைபெற்ற இந்த சிறப்புத் தொழுகையில், நாடு முழுவதும் மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்று துவா செய்தனர். தொடர்ந்து, ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். ஜாக் அமைப்பின் மாநிலச் செயலாளர் அன்சாரி பிர்தவுசி, பக்ரீத் பண்டிகை தொடர்பான உரை நிகழ்த்தி, வாழ்த்து கூறினார்.
பக்ரீத் பண்டிகை கொண்டாடிய முஸ்லிம்கள், ஏழை மக்களுக்கு குர்பானியாக ஆடு, மாடு உள்ளிட்டவற்றின் இறைச்சியை தானமாக அளித்தனர்.












Click it and Unblock the Notifications