ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும்.. ஹைகோர்ட்டில் அப்பல்லோ மனு
சென்னை:ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை வழக்கு தொடர்ந்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவரது மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப் பட்டது.

ஜெயலலிதாவின் உறவினர்கள், பாதுகாவலர்கள், சிகிச்சை அளித்த மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் என பலரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. 2017ம் ஆண்டு அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அப்பல்லோ நிர்வாகத்தை விசாரணைக்கு வருமாறு அழைத்தது.
அதை நிராகரித்த அப்பல்லோ நிர்வாகம் உயர்நீதிமன்றத்தை நாடப்போவதாக கூறியிருந்தது. இருப்பினும், அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இந் நிலையில், ஆறுமுக சாமி ஆணையத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் உள்ள விவரங்கள் வருமாறு: ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரிக்க, நிபுணத்துவம் கொண்ட, தமிழக அரசு சாராத மருத்துவர்களைக் கொண்ட சுதந்திரமான குழுவை நியமிக்க வேண்டும்.
அந்த வழக்கில் தீர்வு காணும் வரை, மருத்துவ விஷயங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டு உள்ளது. வழக்கின் விசாரணை வரும் 11-ம் தேதி நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன்பு வர உள்ளது.












Click it and Unblock the Notifications