அமமுகவுக்கு மற்றொரு முக்கிய புள்ளி குட்பை.. அதிமுகவில் இணைந்தார் புகழேந்தி
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியில் இருந்து மற்றொரு விக்கெட் சரிவடைந்துள்ளது. அந்த கட்சியின் முக்கிய பிரமுகராக இருந்த, பெங்களூரைச் சேர்ந்த புகழேந்தி மறுபடியும் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
ஜெயலலிதா உயிரோடு இருந்த காலம் வரை, கர்நாடக மாநில அதிமுக செயலாளராக நியமிக்கப்பட்டு இருந்தவர் புகழேந்தி. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டபோது, இவர் சசிகலா-டிடிவி தினகரன் தரப்பில் இணைந்து கொண்டார்.

இதன்பிறகு, தினகரனின் வலதுகரம்போல செயல்பட்டு வந்தார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் சார்பில், பல்வேறு டிவி விவாத நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்.
இந்த நிலையில்தான், லோக்சபா தேர்தலுக்கு பிறகு தங்க தமிழ்ச்செல்வன் போன்ற தினகரனின் தீவிர ஆதரவாளர்கள் அமமுக கட்சியில் இருந்து விலகினர். தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இதேபோல புகழேந்தியும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. சில வாரங்களுக்கு முன்பாக சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவரது வீட்டுக்கே சென்று சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார் புகழேந்தி.
இதையடுத்து அவர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியிலிருந்து பிரிந்து அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் பரவியது. ஆனால் இன்றுதான் அது நடந்தேறியுள்ளது.
இன்று இரவு சென்னை அதிமுக தலைமை அலுவலகத்துக்கு தனது ஆதரவாளர்களுடன் வருகை தந்திருந்தார் புகழேந்தி. அங்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். அவரது ஆதரவாளர்களும், அதிமுகவில் இணைந்தனர்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியில் இருந்து, இப்படி பெரிய தலைகள் வேறு கட்சிகளில் இணைந்து கொண்டிருந்த போதிலும் கூட, சமீபத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் அமமுக கட்சி சுமார் 95 இடங்கள் வெற்றி பெற்றது.
கூட்டணிகளை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications