கையில் என்னப்பா அது.. சென்னை ஏர்போர்டை அதிர வைத்த வங்கதேச வாலிபர்.. விசாரித்தால் பெரிய ட்விஸ்ட்
சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் வங்கதேச இளைஞரின் விமான டிக்கெட்டை வாங்கி பார்த்தனர். அது போலி விமான டிக்கெட் என்பதை கண்ட அதிகாரிகள் அவரை கைது செய்தனர். அவரிடம் கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் இந்தியாவின் மிக பிஸியான விமான நிலையங்களில் ஒன்று. இந்த விமான நிலையத்தில் எத்தனை விமானங்கள் எந்த பக்கம் இயக்கினாலும் புக்கிங் தாறுமாறாக இருக்கும். இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் வெளியில் விமான நிலையம் இருக்கும் நிலையில், சென்னைக்குள் மட்டும் கிட்டத்தட்ட மையப்பகுதியில் விமான நிலையம் இருப்பது தான் கூடுதல் சிறப்பு.

சென்னை விமான நிலையத்தை தமிழ்நாடு, ஆந்திராவைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் வெளிநாடு செல்ல பயன்படுத்துகிறார்கள். எப்போதுமே விமானங்கள் வந்து இறங்குவதும், போவதும் என 24 மணி நேரமும் சுறுசுறுப்பாக இயங்குகிறது சென்னை விமான நிலையம்.
இந்நிலையில் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்குள் யார் வந்தாலும், வெளியில் போனாலும் கடும் சோதனைக்கு பின்னரே அது சாத்தியம். சமீபத்தில் விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியின் உள்பகுதியில் இருந்து வெளியே வர முயன்ற இளைஞர் ஒருவரை நுழைவு வாசலில் நின்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தார்கள்
அவர் வங்காளதேசம் நாட்டை சேர்ந்த ஷா ஆலம் (வயது 46) என்பதும், மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்ல விமான நிலையத்துக்குள் சென்ற நிலையில், பயணத்தை ரத்து செய்துவிட்டு வெளியில் வருவதாகவும் கூறியுள்ளார். பாதுகாப்பு படை வீரர்கள் ஷா ஆலம் கையில் இருந்த விமான டிக்கெட்டை வாங்கி பார்த்துள்ளனர். அந்த விமான டிக்கெட் ஷா ஆலம் பெயரில் சென்னையில் இருந்து கோலாலம்பூருக்கு ஏர் ஏசியா விமானத்தில் பயணிப்பதற்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. எனினும் விமான டிக்கெட்டை தொட்டு பார்த்தால் சந்தேகமாக இருந்தது.
இதையடுத்து சந்தேகத்தின் பேரில் ஷா ஆலத்தை கோலாலம்பூர் செல்லும் விமான நிறுவன அலுவலகத்திற்கு அழைத்து சென்றார்கள். அவர்கள் டிக்கெட்டை ஆய்வு செய்தனர். ஆனால் டிக்கெட்டில் வங்கதேசத்தைச் சேர்ந்த வெறொருவர் சென்னையில் இருந்து விமானத்தில் கோலாலம்பூர் புறப்பட்டு சென்றுள்ளது உறுதியானது.. மேலும் ஷா ஆலம் வைத்துள்ள விமான டிக்கெட் போலி விமான டிக்கெட் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் பாதுகாப்பு படை அதிகாரிகள் வங்கதேச நபர் ஷாஆலமை, விமான நிலையத்தில் மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள், தீவிரவாதிகளை கண்காணிக்கும் கியூ பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் , வங்கதேசத்தை சேர்ந்த ஷா ஆலம் டெல்லியில் தங்கி வேலை செய்து வருகிறார். 2 தினங்களுக்கு முன் சென்னை வந்துள்ளார். உறவினர் ஒருவரை வழியனுப்புவதற்காக சென்னை விமான நிலையத்துக்கு வந்தாராம்.
அப்போது உறவினரின் ஒரிஜினல் விமான டிக்கெட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து அதில் தனது பெயரை இணைத்துக் கொண்டு போலி விமான டிக்கெட்டுடன் பணியில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளிடம் காட்டிவிட்டு, உள்ளே சென்றுவந்தாராம். அதன்பின்பு, உறவினரை விமானத்தில் ஏற்றி அனுப்பி விட்டு வெளியில் திரும்பும் போது போலீசில் சிக்கிக் கொண்டாராம். இந்த தகவலை பதிவு செய்து கொண்ட கியூ பிரிவு போலீசார், ஷா ஆலம் கூறுவது உண்மைதானா? உண்மையான விமான டிக்கெட்டில் கோலாலம்பூர் சென்ற பயணி யார்? இந்த போலி விமான டிக்கெட் மோசடியில் அவருக்கும் தொடர்பு உள்ளதா? என்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் மேல் விசாரணைக்காக ஷா ஆலமை சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். விமான நிலைய போலீசார், ஷா ஆலமை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.. வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவர் போலி விமான டிக்கெட்டுடன் பாதுகாப்பு அதிகாரிகளிடம் பிடிபட்ட சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications