நீங்க செத்து போய்டீங்க.. விவசாயியை அலறவிட்ட வங்கி அதிகாரிகள்.. அரியலூரில் அதிர்ச்சி சம்பவம்
சென்னை: அரியலூர் அருகே அரசின் உதவித் தொகையை பெற சென்ற முதியவரை, அவர் உயிருடன் இல்லை எனவும் அவரிடமே கூறிய ஸ்டேட் பேங்க் அதிகாரிகள், உயிருடன் இருப்பதற்கான சான்றிதழ் வாங்கி வரும்படி கூறியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
தமிழகத்தில் உள்ள முதியவர்களுக்கு அரசின் சார்பாக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. வயதான நிலையில் உள்ள முதியவர்களுக்கு இந்த திட்டம் வரப்பிரசாதமாக உள்ளது. தங்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்த பணத்தை மட்டுமே நம்பி உள்ளவர்கள் தமிழகத்தில் ஏராளம்.
இந்த நிதியானது முதியவர்கள் ரேகை வைத்தால் மட்டுமே வழங்கப்படும், அஞ்சலகங்கள் மூலமும் மற்றும் வங்கி கிளைகள், வங்கி சேவை மையங்கள் மூலமும் வழங்கப்பட்டு வருகிறது.

அரியலூரில் அதிர்ச்சி
இந்த நிலையில் உதவித்தொகை பெற சென்ற முதியவர் உயிரோடு இல்லை எனவும் அவரிடமே அவர் உயிரோடு இருப்பதற்காக சான்றிதழ் பெற்று வருமாறு வங்கி அதிகாரிகள் கூறியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள முத்துவாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் 72 வயது. வயது மூப்பின் காரணமாக அரசு வழங்கும் 1000 ரூபாய் பணத்தை வைத்து வாழ்ந்து வருகிறார்.

முதியவர் இறந்ததாக பதிவு
இந்த மாதம் பணம் எடுக்க சேவை மையத்தை நாடி உள்ளார் வங்கி கணக்கில் பணம் இருந்த நிலையில் கைரேகை பதிவு ஆகாததால் எடுக்க முடியவில்லை. இதனால் அடுத்த கட்டமாக ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் நேரடியாக சென்று காசோலை எழுதி கொடுத்து பணம் கேட்டுள்ளார் அப்போது அங்கிருந்த அதிகாரி நீங்கள் இறந்து விட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகையால் உங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்க முடியவில்லை என கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த கோவிந்தன் என்ன செய்வதென்று தெரியாமல் அதிகாரியிடம் கேட்டபோது தாங்கள் உயிருடன் இருப்பதற்காக சான்றிதழை கிராம நிர்வாக அதிகாரியிடம் வாங்கி வருமாறு கூறியுள்ளனர்.

அலைக்கழித்த வங்கி
இதையடுத்து கிராம நிர்வாக அதிகாரி சந்தித்தபோது அவர் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. அதனை கொண்டு சென்று வங்கி நிர்வாகத்திடம் அளித்தபோது வங்கி நிர்வாகம் ஏற்க மறுத்து மீண்டும் தாசில்தாரிடம் சான்றிதழ் வாங்க அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து தான் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழ் வாங்க 72 வயதுடைய முதியவர் கோவிந்தன் அலுவலகத்தை அடைந்து வருகிறார் ஜெயங்கொண்டம் தாசில்தார் அலுவலகத்தில் தான் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழ் வாங்க மனு அளித்துள்ளார்.

முதியவர் கோரிக்கை
70 வயதுக்கு மேல் ஆகி விட்ட நிலையில் பெற்ற பிள்ளைகள் உறவினர்கள் ஆதரவின்றி பிச்சை எடுத்து வாழக்கூடாது என்ற வைராக்கியத்தில் அரசு பணத்தில் வாழ்க்கையை கழித்து வந்த தனக்கு வங்கி அதிகாரிகள் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும், இதுகுறித்து கடந்த சில நாட்களாகவே அலைந்து திரிந்ததில் கடும் மன உளைச்சல் ஏற்பட்டு உள்ளதாக கூறியுள்ளார் கோவிந்தன். மேலும் தனக்கு உடனடியாக முதியோர் உதவித் தொகை அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தவறுதலாக தான் இறந்து விட்டதாக பதிவு செய்த வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதியவர் கோவிந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications