பூனைக்கு யார் மணி கட்டுவது? சேமிப்பதே குற்றமா? வங்கி சேவை மாற்றங்கள்! .
சென்னை: சேமித்து வாழ்ந்த வழக்கம் போய், கடன் வாங்கி செலவழிக்கலாம் என்ற மனநிலைக்கு பலரும் மாறியதால் கடன்கள் அதிகரித்துள்ளதே தவிர, மக்களின் சேமிப்பு உயரவில்லை. அதேநேரம் பெருநிறுவனங்கள் கடனை பெரிய அளவில் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் போனதால வாரக்கடன்கள் அதிகரித்தது. இதுபோதாதென்று வங்கிகள் சேமிப்புக்கு வட்டியை குறைத்துவிட்டன. இதனால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
சேமிப்பது நம் இந்தியர்களின் ரத்தத்தில் ஊறிய பழக்கம், ஆரம்பத்தில் மக்கள் அனைவரும் தாங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை சிறுக சிறுக வங்கிகளில் சேமித்தார்கள். அதற்கு வங்கிகளும் வட்டிகளை வாரி வழங்கின.
இதனால் மக்கள் எவ்வளவு செலவு இருந்தாலும் கொஞ்ச பணத்தை எதிர்காலத் தேவைக்காக ஒதுக்க தொடங்கினர். குறிப்பாக 1969-ஆம் வருடம் நடைமுறைப்படுத்தப்பட்ட வங்கிகள் தேசியமயமாக்கத்திற்கு பின் மக்களின் சேமிக்கும் பழக்கம் கிடுகிடுவென அதிகரித்தது.
பாதுகாப்பானது
மக்களின் சேமிப்பு பழக்கம் காரணமாக நாடு முழுவதும் ஏராளமான வங்கி கிளைகள் திறக்கப்பட்டன. அதை ரிசர்வ் வங்கி கண்காணித்துமுறைப்படுத்தி வந்தது. இதன் காரணமாக வங்கிகளில் பணம் போடுவது பாதுகாப்பானது என்ற மன நிலை மக்களிடம் ஆழமாக பதிந்தது. கிராமிய வங்கிகளும், கூட்டுறவு வங்கிகளும் நாடு முழுவதும் அதிகரித்தன.
பெரிய அளவில்இல்லை
மத்திய அரசின் அஞ்சல் துறை அறிமுகப்படுத்திய ‘கிஸான் விகாஸ்' பத்திரம் போன்ற சேமிப்புத்திட்டங்கள் குறுகிய காலத்தில் மக்களின் சேமிப்பை இரட்டிப்பாக்கின. பொது சேம நல நிதி (பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்டு) சேமிப்பிற்கு வருமானவரிச் சலுகையும் கிடைத்தது. வீடு கட்டுவதோ, வாகனம் வாங்குவதோ எல்லாமே சேமிப்பு பணத்தை எடுத்து மக்கள் பயன்படுத்த தொடங்கினர். கடன் வாங்குவது பெரிய அளவில் இருக்காது.
கார்ப்பரேட் நிறுவனங்கள்
எல்லாம் 1990 வரையில்தான், 1991-இல் கொண்டுவரப்பட்ட தனியார் மயம், தாராளமயச் சீா்திருத்தங்கள் வங்கித் துறையை அப்படியே புரட்டி போட்டன. மக்களின் வாழ்க்கை முறையையும் மாற்றின. கடன் வாங்கி செலவு செய்துவிட்டு, பின்னர் அதை சிறுக சிறுக கட்டிக்கொள்ளும் மனநிலை மக்களிடையே அதிகரித்தது. அந்த காலக்கட்டத்தில் தான் கார்ப்பரேட் நிறுவனங்களும், பெரு நிறுவனங்களும் உருவாக தொடங்கின.
தொழிலதிபா்கள் கடன்
வங்கித்துறை கோடிக்கணக்கில் கடன் கேட்கும் தொழிலதிபா்களுக்கு குறைந்த வட்டியில் கடன்களை அள்ளி வழங்கியது. ஆனால் அவற்றை வசூலிக்க முடியாமல் திணறின. வாரக்கடன் அதிகரித்தது. படிப்படியா வங்கி சேவைகள் வணிகமயமாகின. சேமிப்பாளா்களுக்குத் தரும் வட்டியைக் குறைப்பது வழக்கமான ஒன்றாக மாற தொடங்கியது.
அதிகரித்த வங்கி கணக்குகள்
அதேநேரம் அனைவரும் வங்கி சேவை வரம்புக்குள் கொண்டுவரப்பட்டனர். மாதச் சம்பளம் வழங்குவது, அரசின் உதவித்தொகை, மானியம் என்று எல்லாவிதப் பணப்பரிமாற்றங்களும் வங்கிகளின் மூலமே நடைபெற வேண்டும் என்ற கட்டாயமாக்கப்பட்டது இதனால் சேமிப்புக் கணக்குகள் திடீரென கோடிக்கணக்கில் அதிகரித்தன. வங்கி கணக்கு இல்லாத வீடுகளே இல்லை என்ற அளவுக்கு மாற தொடங்கியது.
ஏடிஎம்களில் பணம் எடுத்தால்
இதனிடையே அனைவரும் வங்கி சேவையை பயன்படுத்த தொடங்கியதால், பணம் வழங்குவது, வங்கி பணப்பரிவர்த்தனை சேவைகள் ஆன்லைன் மயம் ஆனது. பணம் எடுப்பது ஏடிஎம் இயந்திரத்திற்கு மாறியது. முதலில் ஏடிஎம்எகளில் பணம் எடுக்க கட்டணம் வசூலிக்கப்படவில்லை. ஆனால் படிப்படியாக ஐந்து முறைக்கு மேல் எடுத்தால் கட்டணம். பிற வங்கி ஏடிஎம்களில் பணம் எடுத்தால் கட்டணம் என பணம் வசூலிக்க தொடங்கின. சேமிக்கும் பழக்கமே தண்டனைக்குரிய குற்றமாக மாற தொடங்கியது அதன்பிறகுதான்.
வங்கிகள் பாதிப்பு
இது ஒருபுறம் எனில் பொருளாதார மந்தம், கொரோனா லாக்டவுன், அதனால் முடங்கிய தொழில்கள் ஆகியவை காரணமாக வங்கிகளில் வாராக்கடன் அதிகரித்துள்ளது. வங்கிகள் என்ன செய்து சரி செய்வது, எப்படி கடன்களை வசூலிப்பது என்று தெரியாமல் தவிக்கின்றன. பொதுத்துறை வங்கிகளே வாரக்கடன் பிரச்னையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
எப்படி கொடுத்தன
ஒரு பக்கம் டெபாசிட் செய்யும் மக்களுக்கு வட்டியை குறைத்துள்ள வங்கிகள், மறு பக்கம் யாருக்கு கடன் கொடுத்தால் திருப்பி வரும், யாருக்கு கொடுத்தால் திருப்பி வராது என்று கண்கொத்தி பாம்பாக பார்த்து பார்த்து இப்போது கடன்களை வழங்கி வருகின்றன. இந்த மாற்றங்கள் ஆரம்பம் முதலே இருந்திருந்தால் மிகப்பெரிய அளவில் வாரக்கடன் பிரச்சனையில் வங்கிகள் சிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்காது. ஆனால் என்ன மாதியான அழுத்தங்களால் வங்கிகள் கார்ப்பரேட்டுக்களுக்கு வாரி கொடுத்தன என்பது வங்கிகளுக்கே வெளிச்சம்.
என்ன பிரச்சனை
இப்போது நம் பிரச்சனைக்கு வருவோம். வங்கிகள் சேமிப்பு கணக்கில் குறிப்பிட்ட தொகைக்கு கீழே போல் அபராதத்தை வசூலிக்க தொடங்கி உள்ளன.இதேபோல்
பாதுகாப்புப் பெட்டக வாடகையை ஒன்றரை மடங்காக்கி உள்ளன. வங்கியில் ஒரு தொகையை நிலை வைப்பில் முதலீடு செய்துவிட்டால் அதிலிருந்து வரும் கணிசமான வட்டியைக் கொண்டு நிம்மதியாக வாழ்க்கையை நடத்தி வந்த பலர் இப்போது குறைந்த வட்டி மட்டுமே கிடைப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சேவை கட்டணம் காரணமாக மாத சம்பளம் வாங்குவோர் மொத்தமாக பணத்தை ஒரே தடவையில் எடுத்து கொள்ளலாம் என்ற மனநிலைக்கு மாறி வருகிறார்கள்.
சேமிப்பு பழக்கம் மறைகிறது
வாரக்கடன் பிரச்சனை என்பது மோசமான ஒன்று தான். அதேநேரம் வங்கிகள் சிறு கடன் வாங்கியவர்கள், சேமிப்பவர்களை ஊக்குவித்து சென்றால் மட்டுமே பழைய நிலைக்கு வங்கிகள் மீள முடியும். மக்களிடம் கடன் வாங்கி செலவழிக்கும் மனநிலை மாற வேண்டும். அதற்கு சேமித்தால் நல்ல பலன் உண்டு என்ற நிலையை ஏற்படுத்த வங்கிகளால் மட்டுமே முடியும். அப்போது தான் எல்லாம் மாறும். இல்லாவிட்டால் குறிப்பிட்ட சில வணிகர்களிடம் மட்டும் செல்வம் குவிந்துவிடும். மற்றவர்கள் வாழ் நாள் முழுவதும் கடன்காரர்களாக மாறும் அவலநிலையும் ஏற்படும். அதை கட்ட முடியாமல் தவிக்கும் நிலை அதிகரிக்கவே செய்யும். இப்போதே அப்படித்தான் இருக்கிறது என்பது வேதனையான உண்மை.