உடலை உருக்கிய புற்றுநோய்.. கைக்கொடுக்காத சிகிச்சை.. பீலா வெங்கடேசன் உடல் தகனம்
சென்னை: தமிழக எரிசக்தி துறை செயலாளர் பீலா வெங்கடேசன் (பழைய பெயர் பீலா ராஜேஷ்) புற்றுநோய் காரணமாக நேற்று மாலை உயிரிழந்தார். இன்று மாலையில் பீலாவின் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் 2020ல் கொரோனா பரவ ஆரம்பித்தபோது பிரஸ் மீட் நடத்தி கொரோனா குறித்து தொடர்ச்சியான விளக்கங்களைக் கொடுத்து வந்தவர் செயலாளர் பீலா வெங்கடேசன். கொரோனா தொடக்கக் காலத்தில் மிகப் பெரிய பீதி இருந்த வந்த நிலையில், இவரது பிரஸ் மீட்கள் தான் மக்களுக்குத் தெளிவையும் நம்பிக்கையையும் கொடுத்தது. கொரோனா காலகட்டத்தில் தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலாளராக திறம்பட பணியாற்றியவர்.

பீலா ராஜேஷ் (வெங்கடேசன்)
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு அவரது தாயார் ராணி வெங்கடேசன்தான் உறுதுணையாக இருந்து கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில் புற்றுநோய் முற்றிய நிலையில் பீலா நேற்று மாலை இறந்தார்.
முதல்வர் இரங்கல்
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது, "தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் பீலா வெங்கடேசன் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அடிப்படையில் மருத்துவரான பீலா வெங்கடேசன் இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்வாகி, பல்வேறு முக்கியத் துறைகளில் செயலாளராகப் பணியாற்றிய அனுபவமிக்கவர்.
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் சவால் மிகுந்த மருத்துவத்துறை செயலாளராகப் பணியாற்றியவர். மேலும், பல பெரும் பொறுப்புகளில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றிருந்த அவரது அகால மரணம் மிகுந்த வருத்தமளிக்கிறது. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அரசு உயர் அலுவலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல் தகனம்
இதனிடையே, பீலா உடல் தேனாம்பேட்டையிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அவருடன் பணியாற்றிய அதிகாரிகள் பீலா வெங்கடேசன் உடலுக்கு மரியாதை செலுத்தி வருகிறார்கள். அதன்பிறகு, அவரது உடல் ஊர்வலமாக எடுத்து சென்று இன்று பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications