"அவருக்குத்தான்" வேட்டு.. ஆர்.கே சுரேஷ் திடீரென சென்னைக்கு வந்தது ஏன்? முடிவிற்கு பின் என்ன காரணம்?
சென்னை: ஆருத்ரா மோசடி வழக்கில் துபாயில் தலைமறைவாக இருந்த நடிகரும், பாஜக பிரமுகருமான ஆர்.கே.சுரேஷ், பொருளாதார குற்றப்பிரிவில் விசாரணைக்கு ஆஜராக சென்னை வந்துள்ளார். அவரின் வருகைக்கு பின் முக்கியமான சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆருத்ரா மோசடி புகாரில் ஆர்.கே.சுரேஷ்க்கு தொடர்பு இருப்பது விசாரணையில் அம்பலம் ஆகி உள்ளதால் அவரின் கணக்கு முடக்கப்பட்டு உள்ளது. ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கு தேசிய அளவில் கவனம் பெற தொடங்கி உள்ளது. வேலூரை தலைமையிடமாக கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வந்தது. சென்னை, திருவண்ணாமலை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இவர்களுக்கு கிளை இருந்தது.

ஆருத்ரா கேஸ்: ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் 1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.36 ஆயிரம் தருவோம். 10 மாதம் இந்த பணத்தை தருவோம். உங்களுக்கு 3.6 லட்சம் கிடைக்கும் என்று விளம்பரம் செய்துள்ளனர்.
இதை நம்பி முதலீடு செய்த மக்களை அந்த நிறுவனம் கடைசியில் ஏமாற்றி உள்ளது. இந்த நிலையில்தான் ஆருத்ரா நிறுவன இயக்குனர் ஹாரிஸுக்கு கட்சியில் பதவி கொடுத்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை மீது புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
வழக்கு பின்னணி: இந்த வழக்கில் மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இதுவரை 21 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர் . அய்யப்பன், ரூசோ, பாஜக நிர்வாகி ஹரிஷ், மாலதி, பாஸ்கர், மோகன்பாபு, செந்தில் குமார், உள்ளிட்ட 11 பேர் இதுவரை கைதும் செய்யப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் 97 கோடி ரூபாய் மதிப்புடைய அசையா சொத்துக்கள் கண்டறியப்பட்டன. அதேபோல் பல கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி மீட்கப்பட்டது.
இந்த வழக்கில் கைதான ரூசோ என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாஜக ஒபிசி பிரிவு துணை தலைவரான ஆர்.கே.சுரேசுக்கு ஆருத்ரா மோசடியில் தொடர்பிருப்பதாக தகவலை பெற்றது. அதனடிப்படையில் போலீஸ் விசாரணைக்கு உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகும்படி ஆர்.கே.சுரேசுக்கு பொருளாதார குற்றப்பிரிவினர் சம்மன் அனுப்பினர். இந்த சம்மனை ரத்து செய்யக்கோரி ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அதில், பட தயாரிப்பு தொடர்பாகவே ரூசோ தம்மை அணுகியதாகவும், அது தொடர்பாக மட்டுமே பண பரிவர்த்தனை நடந்ததாக கூறியுள்ளார். தனது மனைவி மற்றும் குழந்தையை கவனித்து கொள்வதற்காக வெளிநாட்டில் இருப்பதால், விசாரணைக்கு நேரடியாக ஆஜராக இயலாது என தெரிவித்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது ஆர்.கே.சுரேஷ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி ஆஜராகி, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்த விவகாரத்தில் தம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், தமக்கும் ஆரூத்ரா நிறுவனத்தின் மோசடிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என வாதிட்டார்.
அப்போது நீதிபதி, ஆவணங்களுடன் ஆஜராகும்படி அனுப்பப்பட்டுள்ள சம்மனில், எந்த மாதிரியான ஆவணங்கள் போன்ற விவரங்கள் இல்லை என்பதால் சம்மனை ரத்து செய்யப் போவதாகவும், வேண்டுமானால் தேவையான விவரங்களுடன் புதிய சம்மனை அனுப்பும்படியும் காவல்துறையிடம் தெரிவித்தார். காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் சந்தோஷ் ஆஜராகி, சம்மனை ரத்து செய்ய வேண்டாம் எனவும், இந்த சம்மன் அனுப்பபட்டது குறித்து விளக்கம் பெற்று தெரிவிக்க அவகாசம் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
சமீபத்தில் கைது: இந்த ஆருத்ரா ஹாரிஸ்தான் சமீபத்தில் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில்தான் இந்த மோசடி குறித்து இதுவரை நேரடியாக பேசாமல் இருந்த முதல்வர் ஸ்டாலின், முதல் முறையாக நேரடியாக கருத்து சொன்னார். இதை பற்றி முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் நேரடியாக பேசினார். அதில், மக்களிடம் அதிகம் வட்டி.. அதாவது 23 முதல் 30 சதவிகிதம் மாத வட்டி கொடுப்பதாக கூறி மக்களிடம் இருந்து பணத்தை பெற்று உள்ளனர். கிட்டத்தட்ட 1 லட்சம் பேரிடம் இவர்கள் முதலீட்டை பெற்று உள்ளனர். இதில் கிட்டத்தட்ட 243 கோடி ரூபாய்க்கு முதலீடு பெற்று , அதை திருப்பியும் தராமல் ஏமாற்றி உள்ளனர். இது தொடர்பாக பலர் புகார்களை அளித்துள்ளனர். அந்த புகார்கள் மீது குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்து இருக்கிறோம், என்றுகூறியுள்ளனர் .
ஆருத்ரா வழக்கு; ஆனால் திடீர் திருப்பமாக ஆருத்ரா மோசடி வழக்கில் துபாயில் தலைமறைவாக இருந்த நடிகரும், பாஜக பிரமுகருமான ஆர்.கே.சுரேஷ், பொருளாதார குற்றப்பிரிவில் விசாரணைக்கு ஆஜராக சென்னை வந்துள்ளார். அவரின் வருகைக்கு பின் முக்கியமான சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
லுக் அவுட் நோட்டீஸ் காரணமாக, விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். நீதிமன்ற உத்தரவின்படி போலீசில் ஆஜராக வந்துள்ளதாக தெரிவித்ததை அடுத்து, வெளியே செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. நாளை பொருளாதார குற்றப்பிரிவில் அவர் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.
கைதாகும் ஆர்.கே சுரேஷ்: இந்த வழக்கில் தொடர்புடைய ஆர்.கே சுரேஷ் துபாயில் கைதாக இருப்பதாக கூறப்பட்டது. கைதிகள் பரிமாற்றம் மூலம், துபாயில் துபாய் போலீஸ் மூலம் ஆர். கே சுரேஷ் கைது செய்யப்படுவார் என்று கூறப்பட்டது. இங்கே உள்ளே துபாய் கைதி ஒருவரை பரிமாற்றி அதன்மூலம் ஆர்.கே சுரேஷை தமிழ்நாடு கொண்டு வர உள்ளனர். ஆர்.கே சுரேஷ் தமிழ்நாடு வரும் பட்சத்தில் அவரை அப்ரூவர் ஆக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் இந்த வழக்கில் தொடர்புடைய "பெரிய தலைகளை " கைது செய்ய தமிழ்நாடு போலீசார் திட்டமிட்டுள்ளனர் என்று கூறப்பட்டது.
அந்த கைது நடவடிக்கையை தடுக்கும் விதமாக.. இந்த வழக்கில் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் விதமாக.. கைது நடவடிக்கையை தடுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அவர் சென்னை திரும்பி உள்ளார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications