"என் வெற்றிக்கு பின்னால் என் மனைவி துர்கா உள்ளார்”.. மணமக்களுக்கு அட்வைஸ் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை: “ஆணுடைய வெற்றிக்குப் பின்னால் பெண்கள் இருப்பார்கள். என்னுடைய வெற்றிக்குப் பின்னால் என் மனைவி துர்கா உள்ளார். அதனால் மனைவி சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும்” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று கொளத்தூரில் பேசியுள்ளார்.
சென்னை கொளத்தூரில் ரூ.25.72 கோடி செலவில் அண்ணா திருமண மாளிகையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், 15 ஜோடிகளுக்கான திருமண விழாவில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் கொளத்தூரில் ரோடு ஷோ சென்றார். ரோடு ஷோ சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “கொளத்தூர் தொகுதிக்கு வந்தாலே ஒரு புது எனர்ஜி வந்துவிடும். உற்சாகம் வந்துவிடும், ஒரு புத்துணர்ச்சி வந்துவிடும். கொளத்தூர் என்று பெயர் சொன்னாலே சாதனை அல்லது ஸ்டாலின் என்றுதான் சொல்வார்கள். கொளத்தூர் தொகுதிக்கு மட்டும் செய்து விட்டோம், மற்ற தொகுதிகளுக்கு எதுவும் செய்யவில்லை என்று நினைக்க வேண்டாம். எல்லா தொகுதியும் நம்முடைய தொகுதிதான்.
ஒரு மாவட்டத்திற்கு ஒன்று மாதம் அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறை நான் செல்வேன். 10 நாளைக்கு ஒருமுறை கொளத்தூர் தொகுதிக்கு வந்தால் தான் எனக்கு முழு திருப்தி ஏற்படுகிறது. முதலமைச்சராக இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் மகிழ்ச்சியை காட்டிலும் கொளத்தூர் தொகுதிக்கு வரும்போது ஏற்படும் மகிழ்ச்சி அதிகம்.
எப்போதும் உங்கள் வீட்டுப் பிள்ளையாக குறிப்பாக ஒரு நல்ல பிள்ளையாக இருக்க விரும்புகிறேன். அப்படித்தான் இருக்கிறேன். அமைச்சர்களே பொறாமைப்படும் வகையில் கொளத்தூர் தொகுதியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. கொளத்தூர் தொகுதிக்கு எப்போதும் தனிச்சிறப்பு உண்டு. அதிக மாநகராட்சி பள்ளிகள் உள்ளன. அதிக நூலகங்கள், அதிக மருத்துவமனைகள் உள்ள தொகுதி கொளத்தூர்” எனப் பேசினார்.
மேலும், “ஆணுடைய வெற்றிக்குப் பின்னால் பெண்கள் இருப்பார்கள். என்னுடைய வெற்றிக்குப் பின்னால் என் மனைவி துர்கா உள்ளார். மிசா காலத்தில் பல்வேறு இன்னல்களை சந்தித்த போது என் மனைவி என்னை விட்டுச் சென்று இருந்தால் என்னவாகி இருக்கும்? இப்படி பல்வேறு இன்னல்களை சந்தித்தும் என்னை ஊக்கப்படுத்தி வருவதால் தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறோம். அதனால் மனைவி சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும்” என்று பேசினார்.












Click it and Unblock the Notifications