சென்னை பெசன்ட் நகர் பீச்சுக்கு வந்த விருந்தாளி.. கால் பட்ட இடமெல்லாம் சூப்பராக மாறுதே
சென்னை: சென்னை மாநகராட்சியில் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைக்கு விருந்தாளியாக வந்திருக்கிறது புதிய இயந்திரம். இந்த இயந்திரம் மக்கள் போடும் குப்பைகளை அழகாக பிரித்து சேகரித்து கொண்டு செல்கிறது. மணல்களில் பரவி கிடக்கும் குப்பைகளை அப்படியே அற்புதமாக அகற்றும் இயந்திரத்தை சென்னை மாநகராட்சி புதிதாக இறக்கி உள்ளது. இந்த இயந்திரம் பற்றி பார்ப்போம்.
சென்னை மாநகருக்குள் மக்கள் அதிகம் வந்து செல்லும் கடற்கரைகள் என்றால் மெரினா, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை போன்றவற்றை கூறலாம். இதில் மெரினா கடற்கரை உலகப்புகழ் பெற்ற நீண்ட கடற்கரையாகும். மிக நீண்ட தூரத்திற்கு பரவி கிடக்கும் இந்த கடற்கரை தான் சென்னையின் அடையாளம் என்று சொல்லலாம். மெரினாவையும் சென்னையையும் பிரிக்க முடியாது. சென்னையின் ஆதி அந்த இடம் என்று கூறலாம்.

மிக அழகாக இருக்கும் அந்த இடத்தில் தினமும் பல டன் குப்பைகளை மக்கள் கொட்டி செல்கிறார்கள். அழகாக இருக்க வேண்டிய கடற்கரைகள் அசுத்தமாக்க தினமும் மக்கள் முயற்சிக்கிறார்கள். மெரினாவில் பார்க்கும் இடமெல்லாம் குப்பைகளை போட்டு அழுக்காக்கி வருகிறார்கள். மெரினாவை சுத்தம் செய்வதே மிகவும் சவாலானது. தினமும் தூய்மை பணியாளர்கள் அங்கு தூய்மை பணியினை பல்வேறு சிரமங்களை கடந்து மேற்கொள்கிறார்கள்.
இதேபோல் தான் சென்னையின் மிக அழகான கடற்கரையான பெசன்ட் நகர் கடற்கரையும்.. சென்னையின் மிகப்பெரிய பணக்காரர்கள் தினசரி வாக்கிங் செல்லும் இடமாக உள்ள பெசன்ட் நகர் கடற்கரையும் அந்த சாலையும் அற்புதமாக பராமரிக்கப்படுகிறது. இதன் கரையில் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் என்றும் அழைக்கப்படும் நல்ல ஆரோக்கிய அன்னையின் ஆலயமும், அருகில் அஷ்டலட்சுமி கோயிலும் உள்ளது.
அதேநேரம் இங்குமே மக்கள் குப்பைகளை அதிக அளவில் கொட்டி செல்கிறார்கள். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் பெசன்ட் நகர் கடற்கரையில் எத்தனை டன் குப்பைகள் சேரும் என்பது தூய்மை பணியாளர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயம் ஆகும்.
இந்நிலையில் பெசன்ட் நகர் பீச்சுக்கு புதிதாக ஒரு இயந்திரம் விருந்தாளியாக வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் மூலம் எளிதாக சுத்தம் செய்ய முடிகிறது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில், "பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரையில் தூய்மைப் பணிகள் மேற்கொள்வதற்காக நமக்கு நாமே திட்டத்தின் கீழ், அரசு மற்றும் தமிழ் மேட்ரிமோனி பங்களிப்புடன் ரூ.1 கோடியே 54 ஆயிரம் மதிப்பில் வாங்கப்பட்ட கடற்கரை தூய்மை செய்யும் இயந்திரம் மூலம் பெசன்ட் நகர் கடற்கரையில் தொடங்கி தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த இயந்திரம் செல்லும் சாலைகளில் குப்பைகள் உடனே நீக்கி தூய்மையாகின்றன. இந்த இயந்திரங்கள் அதிக அளவில் வாங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.













Click it and Unblock the Notifications