ரஜினிக்கு 70 வயசாயிருச்சு.. ஒரு தேர்தலைதான் தெம்பாக சந்திக்க முடியும்.. ரங்கராஜ் பாண்டே பரபர பேச்சு
ரஜினி ரசிகர்களுக்கு பாண்டே வேண்டுகோள் விடுத்துள்ளார்
சென்னை: "ரஜினிக்கு வயசு 70. அவரால் ஒரு தேர்தலை மட்டுமே தெம்பாக சந்திக்க முடியும்.. திமுக, அதிமுகவை சமாளிக்க நீங்கள்தான் ரஜினிக்கு உறுதி தர வேண்டும்" என்று பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே ரஜினி ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு ரஜினி அரசியலுக்காகவே ஒரு தனி சேனலை துவங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்தன.
இதற்காக அவர் சூப்பர் ஸ்டார் டிவி, ரஜினி டிவி, தலைவர் டிவி என்ற பெயர்களை பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வந்தது. ஆனால் அந்த செய்தி உண்மையானதுதான் என்று ரஜினியே அப்போது ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
ரஜினி டிவி
இந்த சம்பவத்துக்கு ஒருசில தினங்களுக்கு முன்புதான், டிவி நிகழ்ச்சி ஒன்றின் பொறுப்பில் இருந்து ரங்கராஜ் பாண்டேவும் விலகி இருந்தார். அதனால், எப்படியும் ரஜினி டிவி ஆரம்பித்தால், பாண்டேதான் அதில் பொறுப்பு வகிப்பார் என்ற தகவல்களும் கசிய ஆரம்பித்தன. ஆனால் வந்த வேகத்திலேயே அந்த தகவல் அப்படியே முடங்கி போயிற்று.
புது சேனல்
எனினும் பாண்டே, ரஜினியின் முழு ஆதரவாளராக காட்டிக் கொள்ளவில்லை என்றாலும், எதிர்ப்பாளராக தன்னை எங்குமே முன்னிறுத்தி கொள்ளவில்லை. அதேசமயம், ரஜினியின் புது சேனல் என்ற பேச்சு எப்போது எழுந்தாலும், பாண்டேவின் பெயர், அனைவரின் மனதிலும் தானாகவே எழுவதை இல்லையென்றும் சொல்லிவிட முடியாது.
ரசிகர்கள்
இந்த் சமயத்தில்தான், ரஜினியின் பிறந்த நாள் விழா, வேலூரில் கொண்டாடப்பட்டது. வருடா வருடம் ரஜினியின் பிறந்தநாளினை மிக பிரம்மாண்டமாக நலத்திட்ட உதவிகள், பொதுக் கூட்டங்களுன் நடத்துவது வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினரின் வழக்கம்.
பாரதிராஜா
இந்த ஆண்டும், மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் சோளிங்கர் ரவி ஏற்பாட்டில் நிகழ்ச்சி நடந்தது. இதில் டைரக்டர் பாரதிராஜா, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே போன்றோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.
வயது 70
இதில் பாண்டே பேசும்போது சொன்னதாவது: "அரசியல் என்பது சாதாரணமானதல்ல. பலம் பொருந்திய திமுக., ஆட்சியில் உள்ள அதிமுக போன்ற கட்சிகளை சமாளிக்க முடியும் என்கிற உறுதியை ரசிகர்களான நீங்கள்தான் அவருக்குத் தரவேண்டும். ரஜினிக்கு தற்போது வயது 70. அவரால் ஒரு தேர்தலை மட்டுமே தெம்பாக சந்திக்க முடியும்" என்றார். பாண்டே இப்படி ரஜினியின் வயதை சுட்டிக் காட்டி பேசியது ஒரு வகையில் எதார்த்தம் என்றாலும், அதிமுக, திமுக கட்சிகளை "சமாளிக்க" என்ற வார்த்தையானது, இரு கட்சிகளுடன் ரஜினி எப்போதுமே இணைய மாட்டோரோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
16 வயதினிலே...
இயக்குனர் பாரதிராஜா பேச வந்தார்.. இவருக்கும், ரஜினிக்கும் ஏற்கனவே உரசல்கள் இருந்த நிலையில், என்னத்தை சொல்லி கிலியை தர போகிறாரோ என்று ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு கூடியது. அப்போது "எளிமை மனிதர்.. "16 வயதினிலே' ஷூட்டிங் மலைக் கிராமத்தில் நடந்தபோது... ஒரே ஒரு கெஸ்ட்ஹவுஸ் மட்டும் இருந்தது. அங்கிருந்த ரூம்களை ஹீரோ, ஹீரோயின்களுக்கு தந்துவிட்டோம். எங்களுக்கு படுக்க ரூம் இல்லை.
கொள்கை
அதனால் நானும், ரஜினியும் அந்த கெஸ்ட்ஹவுஸ் ஹாலில்தான் படுத்துக்கொண்டு பல கதைகள் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது நான் பார்த்த அதே எளிமைதான், உயரத்துக்கு சென்ற பிறகும் இன்னமும் இருக்கிறது. அரசியல் பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.. அவர் கொள்கை வேறு, என் கொள்கை வேறு. அரசியலையும், நட்பையும் நாங்கள் பிரித்தே வைத்துள்ளோம்'' என்று பேசி ரஜினி ரசிகர்களின் வயிற்றில் பாலை வார்த்துவிட்டு போனார்.