மொத்தமா மாறுது.. பயணிகளின் கவனத்துக்கு.. "இனிமே அங்கே போகாதீங்க".. சென்னை மெட்ரோ வெளியிட்ட அதிரடி
சென்னை: சென்னை மெட்ரோ நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.. அந்தவகையில், இன்று முதல் பார்க்கிங் வசதி குறித்த தகவலையும் வெளியிட்டுள்ளது. என்ன அது?
சென்னையில் மெட்ரோ ரயிலுக்கான தேவை நாளுக்கு நாள் பெருகியபடியே வருகிறது.. அதற்கேற்றவாறு மெட்ரோவில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. கடந்த மாதம் மட்டும், கிட்டத்தட்ட ஐந்தரை லட்சம் பேர் மெட்ரோவில் பயணித்திருக்கிறார்கள் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிக்கை மூலம் தெரிவித்திருந்தது.

மெட்ரோ ரயில்: இப்போதைக்கு முதல் கட்ட மெட்ரோ ரயில் சேவையானது, 2 வழித்தடங்களில் பயன்பாட்டில் உள்ளது. எனினும், மெட்ரோவின் தேவை சென்னையில் தவிர்க்க முடியாததாகிவிட்டதால், பயணிகளின் நன்மைக்காகவும், வசதிக்காகவும, 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில், மெட்ரோ 2-வது கட்ட திட்டத்தில் சென்னையின் முக்கிய இடங்களை இணைக்கும் வகையில், மொத்தம் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் ரூ.63,246 கோடி செலவில், 116 கிலோ மீட்டர் தூரத்துக்கு 2ம் கட்ட மெட்ரோ பணிகள் தீவிரமாக நடக்கிறது..
நவீன வசதிகள்: அந்தவகையில், எழும்பூர் ரெயில் நிலையம் பல்வேறு நவீன வசதிகளுடன் ரூ.734.91 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான பணிகளும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன.. குறிப்பாக, இந்த மறு சீரமைப்பு பணியில் ரெயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயில் காந்தி இர்வீன் சாலையிலும், பின்புற நுழைவு வாயில் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் அமைய உள்ளது.
இதைத்தவிர, ரெயில் நிலைய கட்டிடங்கள், பலஅடுக்கு வாகன நிறுத்துமிடம், காந்தி-இர்வின் சாலை மற்றும் பூந்தமல்லி சாலை அருகே வணிக வளாகங்கள் அமைத்தல், புதிய பார்சல் அலுவலகம், நடை மேம்பாலம், பார்சல்களை கையாள நடைமேம்பாலம், புதிய ரெயில்வே குடியிருப்புகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
பார்க்கிங் வசதிகள்: ஆனால், எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே வாகன நிறுத்தும் இடம் உள்ளது.. அதனால்தான், அந்த பகுதியில் நடைபெற்று வரும் ரெயில்வே பணிகளால் மெட்ரோ ரெயில் நிலைய வாகன நிறுத்தும் இடம், இன்று முதல் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "எழும்பூர் ரெயில் நிலையம் மற்றும் எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையம் ஆகியவற்றில் தெற்கு ரெயில்வேயின் பன்முக ஒருங்கிணைப்புப் பணிகள் நடை பெற்று வருகின்றன.
அறிவிப்பு: இதனால் எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடம் எழும்பூர் தெற்கு ரெயில்வே பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகத்திற்குப் பக்கத்தில் இடம் மாற்றம் செய்யப்பட்டட்ட வாகன நிறுத்துமிடத்தை அனைத்து பயணிகளும் இன்று (5-ந்தேதி) முதல் பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று கூறப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சொல்லும்போது, "எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடம், எழும்பூர் தெற்கு ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகத்துக்கு பக்கத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இடமாற்றம் செய்யப்பட்ட வாகன நிறுத்துமிடத்தை அனைத்துபயணிகளும் திங்கள்கிழமை அதாவது இன்று முதல் பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications