சர்வாதிகார ஆட்சிக்கு மிகப்பெரிய அடி! தர்மம் வென்றுள்ளது.. நீதிமன்ற தீர்ப்பால் கே.எஸ் அழகிரி பூரிப்பு
சென்னை: அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் தர்மம் மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது என்று கூறியுள்ளார்.
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி பதவி கிடைக்க உள்ளது. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்கட்சி தலைவர்கள் வரவேற்று வருகின்றனர். நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினரும் உற்சாகம் பொங்க மகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் தர்மம் மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது என்று கூறியுள்ளார். இது தொடர்பாக கே.எஸ் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மக்களவையில் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் உரையாற்றும் போது, அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டி பேசிய 20 நாட்களில் சூரத் நீதிமன்றத்தில் ஏற்கனவே நடைபெற்ற அவமதிப்பு வழக்கில் இரண்டாண்டு தண்டனை விதிக்கப்பட்டு பதவி பறிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட போது தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதையொட்டி உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் இன்றைக்கு வழங்கப்பட்ட தீர்ப்பில் தலைவர் ராகுல்காந்தியின் பதவி பறிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மக்களவை உறுப்பினராக மீண்டும் செயல்பட வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்த தீர்ப்பை அரசமைப்புச் சட்டத்திலும், ஜனநாயகத்திலும் நம்பிக்கையுள்ள அனைவரும் பெருத்த மகிழ்ச்சியோடு வரவேற்கின்றார்கள். உச்ச நீதிமன்றம் நீதி வழங்கியதன் மூலம் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. ஜனநாயக உரிமைகள் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வியது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் தர்மம் மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது.
மோடி ஆட்சியில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டு பாசிச, சர்வாதிகார ஆட்சிக்கு இந்த தீர்ப்பு மிகப்பெரிய அடியாக அமைந்திருக்கிறது. இதன்மூலம் மக்களின் குரலாக மக்களவையில் தலைவர் ராகுல் காந்தியின் குரல் மீண்டும் ஒலிக்கப் போகிறது. இது இந்தியாவின் நீதி பரிபாலனத்திற்கும், சட்டத்தின் ஆட்சிக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். இவ்வாறு கே.எஸ் அழகிரி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications