"துணிவு" இருக்கா.. நாம் தமிழர் என சொல்பவன் எல்லாம் தமிழனா? எகிறிய திமுக.. ஷாக்கில் சீமான் "தம்பிகள்"
சென்னையில் சீமானுக்கு எதிராக திமுக தரப்பில் துணிவு பட ஸ்டைல் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன
சென்னை: "நீ கடலுக்குள்ள போய் பேனாவை வை, நான் வந்து உடைக்கிறேனா இல்லையான்னு மட்டும் பாரு" என்று சீமான் கொந்தளித்திருந்த நிலையில், திமுக தரப்பு காட்டமான பதிலடி ஒன்றை தந்துள்ளது.
தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, சென்னை மெரீனா கடற்கரையை ஒட்டி கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக விவகாரம் வெடித்துள்ளது.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் நடத்தி வரும் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்ட நிலையில் பெரும் மோதலும் சலசலப்பும் அன்றைய தினம் ஏற்பட்டது.

புதைக்க விட்டதே தப்பு
கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பெரும்பாலான திமுகவினரும் கூடியிருந்தனர். இந்த கூட்டத்துக்கு சீமானும் வரப்போவதாக சொல்லியிருந்ததால், நாம் தமிழர் கட்சியினரும் திரளாக வந்திருந்தனர். பேனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமான் பேசும்போதே, கூட்டத்திற்கு வந்திருந்த திமுகவினர் கூச்சலிட்டு, அவரை பேச்சை நிறுத்தும்படி சொன்னார்கள்.. அப்போது சீமான், "உனக்கு எதைப் பற்றி அக்கறை இருந்திருக்கிறது? கடற்கரையில் புதைக்கவிட்டதே தவறு. இதில் பேனா நினைவுச் சின்னம் வேறு வைக்க வேண்டுமா? வேணும்னா, அறிவாலயத்தில் போய் வையுங்கள்... நினைவிடம் கட்டியிருக்கிறீர்களே, அதில் வையுங்கள், கடலுக்குள்தான் வைப்பாங்களாம்.

வந்து உடைக்கறேன்
சும்மா மீனவ சங்கம் என்ற பெயரில், அனைத்து மீனவ சங்கம், அகில இந்திய மீனவ சங்கம் என்ற பெயரில் இங்கு வந்துவிட்டு இதனால் ஒன்றும் பாதிப்பில்லை என்று எதையாவது பேசிக்கிட்டு. நீங்கள் பேனா வையுங்கள், ஒருநாள் நான் வந்து உடைக்கிறேன். பள்ளிக்கூடத்தை சீரமைக்க காசு இல்லை, பேனா வைக்க காசு எங்கிருந்து வருகிறது? நீ போகச் சொன்னால் நான் போய்விடுவேனா? பேனா நினைவு சின்னம் வைக்கக் கூடாது என்று சொல்லவில்லை. அதை ஏற்கிறோம். கடலில் வைக்கக் கூடாது. நாங்கள் கடலுக்குள் பேனா வைப்பதை எதிர்க்கிறோம், எதிர்க்கிறோம், எதிர்க்கிறோம். எனவே அதைத் தடுத்து நிறுத்தும் வரை கடுமையான போராட்டம் நடத்துவோம். இது உறுதி" என்று சீறியிருந்தார் சீமான்.

சுப வீரபாண்டியன்
சீமானின் இந்த பேச்சுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் தங்கள் கருத்தை தெரிவித்திருந்தனர்.. பேனாவை உடைக்கும்வரை எங்கள் கைகள் அதுவரை பூப்பறிக்குமா? சீமானுக்கு மட்டும் தான் கை இருக்கா? எங்களுக்கெல்லாம் கைகள் இல்லையா? என்று அமைச்சர் சேகர்பாபு உட்பட பலரும் ஆவேசமாக பதிலடி தந்திருந்தனர்.. ஆனால், கருத்துக் கேட்பு கூட்டம் தொடர்பான விஷயத்தில், சோஷியல் மீடியாவை சரியாக கையாளவில்லை என்றும் திமுக தரப்பு நினைக்கிறதாம்.. "பேனா நினைவு சின்னம் வேணாம்" என்று ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் அளவுக்கு விஷயம் போய்விட்டதை அவர்களே எதிர்பார்க்கவில்லையாம்..

ஆறப்போடுங்க
இது திமுக தரப்புக்கே லேசான அதிர்ச்சி தான் என்கிறார்கள்.. அதனால்தான், பேனா விவகாரத்தை கொஞ்ச நாள் ஆறப்போட நினைக்கிறதாம் திமுக தலைமை, இனி பேனா விஷயம் தொடர்பாக யாரும் எந்த கருத்தும் சொல்ல வேண்டாம்... மீடியாக்களிலும் இதை பற்றி பேசவேண்டாம் என்று வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளதாக செய்திகள் வலம்வருகின்றன.. எனினும், சீமான் பேச்சின் வீரியம் இன்னும் குறையாததால், சீமானுக்கு காட்டமாக பதிலடி தரும் வகையில் திமுக தரப்பில் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது.

துணிவு டிசைன்
அந்த போஸ்டர் டிட்டோ "துணிவு" படத்தின் போஸ்டர் போலவே காணப்படுகிறது.. துணிவு பட போஸ்டர் டிசைனிலேயே, சீமானுக்கு கண்டனத்தையும் திமுக பதிவு செய்துள்ளது. "கலைஞரின் முரட்டு பக்தர்கள் உயிர் இருக்கும் வரை உனக்கு பேனாவை உடைக்க "துணிவு" இருக்கா? நாம் தமிழர் என்று சொல்பவன் எல்லாம் தமிழன் இல்லை. தமிழன தலைவர் கலைஞரை போற்ற தெரிந்தவர்களே உண்மையான நம் தமிழர்கள் என்று அந்த போஸ்டரில் பதிவிடப்பட்டுள்ளது..

தம்பிகள் சீற்றம்
இந்த போஸ்டர் கழக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு ஜெ.எம்.பஷீர் என்பவர் பெயரால் சென்னை முழுவதும் ஒட்டப்பட்டிருக்கிறது... இந்த போஸ்டரை பார்த்து நாம் தமிழர் கட்சியினர் கடுப்பில் உள்ளார்களாம்.. காரணம், பேனா விவகாரத்துக்கான எதிர்ப்பாகவே மட்டுமேயல்லாமல், நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள், தமிழர்களே இல்லை என்பது போல அதில் வரிகள் உள்ளதால், கொந்தளித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த போஸ்டரை உடன்பிறப்புகள் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வரும்நிலையில், பதிலடி தருவதற்காக, சீமானின் தம்பிகளும் தயாராகி வருகிறார்களாம்..!!












Click it and Unblock the Notifications