IIT Madras: சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை..தாமாக முன்வந்து விசாரிக்கும் தேசிய மகளிர் ஆணையம்
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவத்தில் பீகார் வாலிபரை போலீசார் கைது செய்திருந்தனர். இந்த நிலையில் இவ்வழக்கை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை செய்கிறது. ஊடகங்களில் வந்த செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து விசாரிக்கும், தேசிய மகளிர் ஆணையம் வழக்கை நேர்மையாக, குறித்த காலத்திற்குள் விசாரித்து முடிக்க டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்த வழக்கின் குற்றவாளியான ஞானசேகரன் கைது செய்யப்பட்டு அவருக்கு தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவமே இன்னும் ஆறாத நிலையில், சென்னை ஐ.ஐ.டி வளாகத்துக்குள் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை ஐஐடி கல்லூரியில் படிக்கும் மாணவியின் தோழி ஒருவர் நேற்று முன் தினம் ஐஐடி வளாகத்திற்கு வந்துள்ளார்.
தன் தோழியை சந்திப்பதற்காக வந்த அவர் பின்னர் இரவில் வீட்டுக்கு திரும்பியிருக்கிறார். அப்போது தனியாக நடந்து வந்த மாணவியை பார்த்த வாலிபர் ஒருவர் திடீரென மாணவியை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தலைமுடியை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.
இதனால் திடுக்கிட்ட மாணவி கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனால் அங்கிருந்தவர்கள் ஓடி வந்தனர். இதைப் பார்த்ததும் அந்த வாலிபர் ஓட முயன்றார். எனினும் அவர்கள் அந்த வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து சென்னை கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
விசாரணையில் அந்த வாலிபர் ரோஷன் (வயது 22) என்பதும், பீகாரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. ஐஐடி கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் கேண்டீனில் ஊழியராக ரோஷன் பணி செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை ஐஐடி கல்லூரி வளாகத்தில் பணிபுரிந்து வந்த வடமாநில இளைஞர் ஒருவரே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான் தேசிய மகளிர் ஆணையம் இந்த வழக்கை கையில் எடுத்துள்ளது. ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து தேசிய மகளிர் ஆணையம் விசாரிக்கிறது. மேலும் தேசிய மகளிர் ஆணையம் சார்பில், வழக்கை நேர்மையாக, குறித்த காலத்திற்குள் விசாரித்து முடிக்கவும் டிஜிபிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications