அதிதீவிர புயலாகும் “பைபர்ஜாய்”.. வடக்கே போச்சே! தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் மழை கொட்டப்போகுது
சென்னை: அரபிக் கடலில் உருவாகி இருக்கும் பைபர்ஜாய் புயல் 12 மணி நேரத்தில் மிகவும் தீவிர புயலாக வலுவடையக் கூடும் என்று தெரிவித்து உள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறி இருக்கிறது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், "நேற்று (06.06.2023) காலை 08:30 மணி அளவில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், காலை 11:30 மணி அளவில் அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மாலை 05:30 மணி அளவில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் "பைபர்ஜாய்" புயலாக மேலும் வலுவடைந்தது.
இது வடக்கு திசையில் நகர்ந்து இன்று (07.06.2023) காலை 05:30 மணி அளவில் தீவிர புயலாக வலுப்பெற்று, காலை 08:30 மணி அளவில் கோவாவில் இருந்து மேற்கு - தென்மேற்கே சுமார் 880 கிலோமீட்டர் தொலைவில், மும்பையில் இருந்து தென்மேற்கே சுமார் 990 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் மிக தீவிர புயலாக வலுப்பெறக்கூடும். அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து, அதன் பிறகு வடக்கு - வடமேற்கு திசையில் அதற்கடுத்த மூன்று தினங்களில் நகரக்கூடும்.

தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று (07.06.202) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளையும் நாளை மறுதினமும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன் 10 மற்றும் 11 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 - 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை) 5, மதுரை வடக்கு, மதுரை விமான நிலையம், மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), மகாபலிபுரம் (செங்கல்பட்டு) தலா 3, அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), திண்டிவனம் (விழுப்புரம்), புதுச்சேரி, ஆண்டிபட்டி (மதுரை), மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), அவலாஞ்சி (நீலகிரி) தலா 2, சூரப்பட்டு (விழுப்புரம்), மணம்பூண்டி (விழுப்புரம்), தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி), திருவண்ணாமலை, முகையூர் (விழுப்புரம்), செய்யார் (திருவண்ணாமலை), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), கேதார் (விழுப்புரம்), சென்னை நுங்கம்பாக்கம், தாலுகா அலுவலகம் (அரியலூர்), விழுப்புரம், காட்டுமயிலூர் (கடலூர்), பரங்கிப்பேட்டை (கடலூர்), பெரம்பூர் (சென்னை), கள்ளந்திரி (மதுரை), கள்ளக்குறிச்சி, வாடிப்பட்டி (மதுரை), தரமணி ARG (சென்னை), செங்கல்பட்டு, பூண்டி (திருவள்ளூர்), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை) தலா 1 செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது." என்று குறிப்பிட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications