பிறப்பு சான்றிதழில் பெயர் மாற்றம்.. Gazette பதிவு கட்டாயமா? தமிழகத்தில் பலருக்கும் தெரியாத ரூல்
சென்னை: சொந்தமாக வீடு வாங்கும் போதோ அல்லது குழந்தையை பள்ளியில் சேர்க்கும் போதோ தான் பலருக்கும் தங்களின் பிறப்பு சான்றிதழில் பெயர் குளறுபடி இருப்பது தெரிய வருகிறது.. பாஸ்போர்ட் எடுக்கும் போது தான் இந்த சிக்கல் இன்னும் பெரிய தலைவலியாக மாறி நிம்மதியைக் கெடுக்கிறது.. ஆனால், பிறப்பு சான்றிதழில் முழுப் பெயரை மாற்ற வேண்டும் என்றால் தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ அரசிதழில் (Gazette Notification) பதிவு செய்வது மட்டும்தான் சட்டபூர்வமான ஒரே வழி.. அது ஏன் தெரியுமா?
சொந்த வீடு வாங்கும் நேரத்தில், பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும் நேரத்திலி, பாஸ்போர்ட் எடுக்கும் நேரத்தில், தான் இந்த சிக்கல் பெரிய தலைவலியாக மாறுகிறது..

பிறப்பு சான்றிதழ்
பிறப்பு சான்றிதழில் உள்ள சிறிய எழுத்துப் பிழையாக இருந்தால் உள்ளாட்சி அமைப்புகள் அல்லது நகராட்சி அலுவலகங்களிலேயே எளிதாகச் சரிசெய்து கொள்ளலாம்.. ஆனால், முழுப் பெயரையும் மாற்ற வேண்டும் என்றாலோ, அல்லது சான்றிதழ் வாங்கி பல வருடங்கள் ஆகிவிட்டாலோ சாதாரண திருத்தங்கள் செல்லுபடியாகாது.
அதற்கு தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ அரசிதழில் (Gazette Notification) பெயர் மாற்றம் செய்வது மட்டும்தான் சட்டபூர்வமான ஒரே வழியாகும்..
அரசிதழில் முழு பெயர் மாற்றம் செய்ய முதலில் ஒரு நோட்டரி வழக்கறிஞரிடம் "பெயர் மாற்ற பிரமாணப் பத்திரம்" (Name Change Affidavit) வாங்க வேண்டும்.. முத்திரைத்தாளில் தயாரிக்கப்படும் இந்த பத்திரத்தில் பழைய பெயர், புதிய பெயர், முகவரி மற்றும் பெயர் மாற்றத்திற்கான காரணம் தெளிவாக இருக்க வேண்டும்.
கெஜட்டில் பெயர் மாற்றம்
நோட்டரி வழக்கறிஞரின் கையெழுத்து வாங்கிய பின், தமிழ்நாட்டில் பரவலாக விநியோகிக்கப்படும் 2 முன்னணி நாளிதழ்களில் அதாவது ஒன்று தமிழ், மற்றொன்று ஆங்கிலம் நாளிதழில பெயர் மாற்ற விளம்பரத்தை வெளியிட வேண்டும்.. அந்த விளம்பரத்தில் பழைய பெயர், புதிய பெயர் மற்றும் பிரமாணப் பத்திரம் பெற்ற தேதி போன்ற விபரங்கள் கண்டிப்பாக இடம்பெற வேண்டும்.. இந்த விளம்பரத்தின் அசல் பிரதிகள் அரசாங்கத்திற்கு ஆதாரமாகச் சமர்ப்பிக்கத் தேவைப்படும்..
நாளிதழ்களில் விளம்பரம் வந்த பிறகு, அடுத்ததாக சென்னை அண்ணா சாலையில் உள்ள எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்ககத்தின் அரசாங்கப் பதிவகத்தில் இதற்கான விண்ணப்பத்தை அளிக்க வேண்டும்..
தமிழக அரசு - ஆவணங்கள்
பூர்த்தி செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ விண்ணப்பப் படிவத்துடன், நோட்டரி அஃபிடவிட், நாளிதழ் விளம்பரங்களின் அசல் பக்கங்கள், ஆதார் அல்லது ரேஷன் கார்டு நகல் மற்றும் அரசாங்கம் நிர்ணயித்துள்ள கட்டணத்திற்கான ஈ-சலான் (e-Challan) ரசீது ஆகியவற்றை இணைக்க வேண்டும்.. விண்ணப்பங்களை நேரடியாகச் சென்றும் கொடுக்கலாம் அல்லது தபால் மூலமாகவும் அனுப்பி வைக்கலாம்..
அரசு அதிகாரிகள் இந்த ஆவணங்களை முழுமையாக ஆய்வு செய்து, எவ்வித முறைகேடுகளும் இல்லை என்பதை உறுதி செய்த பின், பெயர் மாற்ற விபரம் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும்..
பிறப்புச் சான்றிதழ் அவசியம்
இந்த அரசிதழ் நகல் வெளியான பிறகு, பிறப்பு சான்றிதழின் பழைய பெயரைக் காட்டி, புதிய பெயருக்கான சட்டபூர்வ உரிமையைப் பெற முடியும்.. இந்த பெயர் மாற்ற நடைமுறைகள் முடிவடைய பொதுவாக 3 முதல் 6 வாரங்கள் வரை ஆகும்.. இதற்கான அரசு மற்றும் இதர கட்டணங்கள் 3,000 முதல் 6,000 ரூபாய் வரை வரலாம் என்று சென்னை வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்..
பொதுவாக பள்ளி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் போன்ற ஆவணங்களில் பெயர் மாறும்போது எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு மற்றும் அரசு சலுகைகளைப் பெறுவதில் சிக்கல் நீடிக்கும்.. இதனால் தான் அரசிதழ் பதிவு அவசியமாகிறது.
ஆன்லைன் மூலமாகவும் இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் வசதிகள் இப்போது நடைமுறையில் உள்ளன.. விண்ணப்பம் நிராகரிக்கப்படாமல் இருக்க, சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களில் முகவரியும், பெயரின் ஸ்பெல்லிங்கும் சரியாக இருக்கிறதா என்பதைப் பொதுமக்கள் முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்வது நல்லது..!!












Click it and Unblock the Notifications