'பெரியார்' கொள்கை வழியில் பயணிப்போம்.. 'சனாதன' பாஜக கூட்டணி கட்சியான பாமக அறைகூவல்!
சென்னை: 'சனாதன தர்மத்தை' பின்பற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக, சனாதன தர்மத்தை ஒழிப்போ என்கிற கொள்கையின் நிறுவனரான தந்தை பெரியார் வழியில் பயணிப்போம் என திடீர் அறைகூவல் விடுத்துள்ளது.
மனிதர்களின் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வுகளை நியாயப்படுத்துகிற, நிலைப்படுத்துகிற சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என தமிழ்நாடு அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பேசினார். அவரது இந்த பேச்சுக்கு ஒட்டுமொத்த அகில இந்திய பாஜகவும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கான பாஜகவின் முழக்கமாக 'சனாதன தர்மத்தை பாதுகாப்போம்' சனாதனிகளைப் பாதுகாப்போம்' என்பது அமையக் கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது. பிரதமர் மோடி முதல் ஒவ்வொரு மாநில பாஜக தலைவர்களும் இந்த பிரச்சனையை அணையவிடாமல் அடைகாத்து வருகின்றனர்.
அதேநேரத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ்நாட்டு பாஜக தலைவர்கள், ஆக்கப்பூர்வமான வகையில் பாஜகவை பின்பற்றி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இன்றைக்கு தந்தை பெரியார் பிறந்த நாள். தமிழ்நாட்டில் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என முதல் கலகக் குரல் எழுப்பிய புரட்சியாளர் பெரியார். ஆனால் பெரியார் இல்லாத தமிழ்நாட்டு அரசியலை பாஜகவின் கூட்டணி கட்சிகளான அதிமுகவோ, பாமகவோ நினைத்துப் பார்க்க முடியாது. அது கட்சிகளின் இருப்புக்கே உலை வைக்கும் என்பதை அக்கட்சித் தலைவர்கள் உணர்ந்துதான் இருக்கின்றனர்
தந்தைப் பெரியாரின் 145-ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சமூகநீதி வரலாற்றில் மிகவும் முக்கியமான இந்த நாளில் அவரை வணங்குவோம்... போற்றுவோம். சுமரியாதையின் சின்னம் தந்தைப் பெரியாரின் கொள்கைகள் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடியவை. அவற்றை நினைவுகூர்வதுடன், அவரது வழியில்…
— Dr S RAMADOSS (@drramadoss) September 17, 2023
இதனால் பாஜகவை பற்றி கவலைப்படாமல் இன்று தந்தை பெரியார் பிறந்த தினத்தை வழக்கம் போல அதிமுகவினர் கொண்டாடினர். இதில் ஒருபடி மேலே போனது பாமக. அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமது எக்ஸ் பக்கத்தில், தந்தைப் பெரியாரின் 145-ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சமூகநீதி வரலாற்றில் மிகவும் முக்கியமான இந்த நாளில் அவரை வணங்குவோம்... போற்றுவோம். சுமரியாதையின் சின்னம் தந்தைப் பெரியாரின் கொள்கைகள் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடியவை. அவற்றை நினைவுகூர்வதுடன், அவரது வழியில் தொடர்ந்து பயணிக்க இந்த நாளில் உறுதியேற்றுக் கொள்வோம்!#Periyar145 என்று பதிவிட்டுள்ளார். என்னதான் ஓட்டு அரசியலுக்காக பாஜக அணியில் இடம் பெற்றிருந்தாலும் தந்தை பெரியார் தவிர்க்க முடியாதவர்; தந்தை பெரியார் கொள்கை வழி நடப்போம் என சொல்லாமல் இங்கே அரசியல் பருப்பு வேகாது என்பதை முதுபெரும் தலைவர் டாக்டர் ராமதாஸ் உணர்ந்துதான் இப்பதிவை இத்தருணத்தில் வெளியிட்டுள்ளார் என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள்.












Click it and Unblock the Notifications