நாக்கை வெட்டுவோம், கண்ணை தோண்டுவோம்னு சொல்றது ரொம்ப தப்பு.. மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை கண்டனம்
சென்னை: சனாதனத்தை எதிர்த்தால் நாக்கை துண்டிப்பதாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பேசியிருந்தால் அது தவறு என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தமிழ்நாடு எழுத்தாளர்கள் சங்கம் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர் பேசுகையில் சில விஷயங்களை ஒழிக்க வேண்டும். சில விஷயங்களைத்தான் எதிர்க்க வேண்டும்.

அந்த வகையில் சனாதனம் எதிர்க்கப்பட வேண்டிய ஒன்றல்ல, அழிக்கப்பட வேண்டிய ஒன்று. டெங்கு, மலேரியா, கொரோனா உள்ளிட்டவை போல் சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டியது என உதயநிதி தெரிவித்திருந்தார். இவரது இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.
சனாதனத்தை ஒழிப்போம் என கூறிய உதயநிதியின் தலையை சீவுவோம் என அயோத்தி சாமியார் மிரட்டல் விடுத்திருந்தார். அதற்கு பதிலுக்கு உதயநிதியோ என் தலையை சீவ எதுக்கு 10 கோடி, 10 ரூபாய் சீப்பு இருந்தால் நானே சீவிக் கொள்வேன் என நக்கலாக தெரிவித்திருந்தார். அது போல் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பலர் சனாதனம் குறித்து உதயநிதி பேசியதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.
சிலர் உதயநிதிக்கு எதிராக வழக்கு தொடடுத்த நிலையில் எத்தனை பேர் எதிர்த்தாலும் சனாதனத்தை ஒழிப்பதில் உறுதியாக இருக்கிறேன் என கூறியிருந்தார். இந்த நிலையில் சனாதனத்தை ஒழிப்பேன் என கூறிய கூட்டத்தில் உதயநிதியின் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்த இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு பதவி விலக வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்தார்.
இதை வலியுறுத்தி நேற்று முன் தினம் மாலை வள்ளுவர் கோட்டம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன், பொன் ராதாகிருஷ்ணன், நாராயணன் திருப்பதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எத்தனை உருட்டல்கள், மிரட்டல்கள் வந்தாலும் நாங்கள் பயப்பட மாட்டோம் என அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்தார்.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியிருப்பதாவது: சனாதனத்தை எதிர்த்தால் நாக்கை பிடுங்குவோம், கண்களை தோண்டுவோம். சனாதனத்திற்கு எதிராக பேசும் எவரும் நாட்டில் அரசியல், அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாது. சனாதனத்தை ஒழிப்பதாக கூறுவதை பொறுத்து கொள்ள முடியாது என சர்ச்சையை ஏற்படுத்தும்படி பேசியுள்ளார்.

இந்த நிலையில் இவருடைய கருத்துக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலை பேசுகையில், நாக்கை துண்டிப்பதாக வன்முறையை தூண்டும் வகையில் மத்திய அமைச்சர் பேசியது தவறு. இசைக் கச்சேரி குளறுபடிகளுக்கு ஏ.ஆர்.ரகுமானை காரணப்படுத்த முடியாது. அவர் தமிழகத்தின் சொத்து என அண்ணாமலை தெரிவித்திருந்தார். ஏற்கெனவே உதயநிதியின் தலைக்கு ரூ 10 கோடி விதித்த சாமியாருக்கு கண்டனம் தெரிவித்ததோடு அவர் போலி சாமியார் என அண்ணாமலை பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications