சிபிஎஸ்சி பள்ளியின் நிர்வாக குழு தலைவர் திருமாவளவன்.. விஜய்யை தொடர்ந்து திருமா மீது அண்ணாமலை அட்டாக்
சென்னை: சென்னை வேளச்சேரியில் செயல்படும் சிபிஎஸ்சி பள்ளி ஒன்றின் நிர்வாகக் குழு தலைவர் திருமாவளவன் தான் என்றும், அரசுப் பள்ளியில் ஏழை எளிய மாணவர்களுக்கு மும்மொழிகள் வேண்டாம் என்று கூறுபவர்கள் அனைவருமே, மும்மொழிகள் பயிற்றுவிக்கும் தனியார் பள்ளிகளுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும் என்றும், தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் 2,000 கோடி ரூபாயைத் தரச் சட்டத்தில் இடம் இல்லை என்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். அவரது பேச்சுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு, யுஜிசி புதிய விதி, புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னையில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், "இந்த மும்மொழி திட்டத்தை அவர்கள் திணிப்பதற்கு என்ன காரணம் என்றால், இந்தியா முழுவதும் ஒரே மொழியை பேசுகிற ஒரு நிலையை உருவாக்க வேண்டும் என்பது தான். நீ எந்த தாய்மொழியை பேசினாலும், இந்தி தான் இந்தியாவின் தாய் மொழி, அதை பேசி ஆக வேண்டும் என்கிறார்கள். ஒரே தேசம் ஒரே மொழி, ஒரே தேசம் ஒரே கலாச்சாரம், ஒரே தேசம் ஒரே மதம், ஒரே தேசம் ஒரே கட்சி என்பது தான் அவர்களுடைய இலக்கு.
திராவிட இயக்கங்களும், திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளும் இருக்கும் வரைக்கும், அவர்களுடைய ஜம்பம் இங்கு பலிக்காது. அவர்களின் மாயாஜால வித்தைகள் எடுபடாது. நீங்கள் என்ன முயற்சி செய்தாலும், தமிழ்நாட்டில் உங்களால் காலூன்ற முடியாது, வேரூன்ற முடியாது. உங்கள் வாலை ஒட்ட நறுக்குவோம் என்று சொல்வதை நான் கடமைப்பட்டிருக்கிறேன். நீங்கள் எவ்வளவு பேரை ஏவி விட்டாலும், பெரியாருக்கு எதிரான அரசியலை பேசினாலும், இந்த மண்ணில் உங்கள் அரசியல் ஒருபோதும் எடுபடாது" என்று பேசினார்.
இந்நிலையில், திருமாவளவன் பேச்சுக்கு எதிராக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, திமுகவினரைப் போலவே இரட்டை வேடம் போடுபவர்கள் வரிசையில், அண்ணன் திரு. திருமாவளவன் இருக்க மாட்டார் என்று நினைத்திருந்தேன். ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.
சென்னை வேளச்சேரியில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைக் கொண்டு செயல்படும் Blue Star Secondary School என்ற பள்ளியின் நிர்வாகக் குழு தலைவர், அண்ணன் திரு. திருமாவளவன் தான். அரசுப் பள்ளியில் ஏழை எளிய மாணவர்களுக்கு மும்மொழிகள் வேண்டாம் என்று கூறுபவர்கள் அனைவருமே, மும்மொழிகள் பயிற்றுவிக்கும் தனியார் பள்ளிகளுடன், ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருப்பது ஏன்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, மும்மொழிக் கொள்கையை தவெக தலைவர் விஜய் எதிர்த்திருந்த நிலையில், "இந்தியை திணிக்கக்கூடாது என்று கூறும் நடிகர் விஜய், ' விஜய் வித்யாஸ்ரம் ' எனும் பெயரில் சிபிஎஸ்இ பள்ளியை நடத்தி வருகிறார். அந்த பள்ளியின் ஆவணத்தில் சி.ஜோசப் விஜய் என்ற பெயர் உள்ளது." என அண்ணாமலை விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications