பாஜக அதிரடி.. தமிழக தேர்தல் பொறுப்பாளராக பைஜெயந்த் பாண்டா நியமனம்.. துணை பொறுப்பாளரும் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக பாஜகவுக்கான பொறுப்பாளர் மற்றும் துணை பொறுப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் விரைவில் நடைபெற உள்ள பீகார் சட்டசபை தேர்தலுக்கான பொறுப்பாளர், துணை பொறுப்பாளர்களின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை அனைத்து கட்சிகளுமே தொடங்கி விட்டன. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, விஜயின் தவெக மற்றும் நாம் தமிழர் என்று மொத்தம் 4 முனை போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலில் அதிமுகவுடன், பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இந்நிலையில் தான் தமிழக சட்டசபை தேர்தலையொட்டி பாஜக சார்பில் தேர்தல் பொறுப்பாளர் மற்றும் துணை பொறுப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான அறிவிப்பை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இன்று வெளியிட்டுள்ளார். அதன்படி 2026 தமிழக சட்டசபை தேர்தல் பொறுப்பாளராக பைஜெயந்த் பாண்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை பொறுப்பாளராக முரளிதர் மொஹோல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதில் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள பைஜெயந்த் பாண்டா எம்பியாகவும், பாஜகவின் தேசிய துணை தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். பைஜெயந்த் பாண்டா ஒடிசாவை சேர்ந்தவர். இவர் ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதாதளம் கட்சியில் செயல்பட்டு வந்தார். 2000ல் ராஜ்யசபா எம்பியானார். 2009 வரை அந்த பொறுப்பில் இருந்தார்.
அதன்பிறகு அவர் 2009ம் ஆண்டில் ஒடிசாவின் கேந்தரபாரா லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2018 ல் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி நவீன் பட்நாயக் அவரை சஸ்பெண்ட் செய்தார்.
இதையடுத்து அவர் 2019ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி பாஜகவில் சேர்ந்தார். அதன்பிறகு பாஜகவின் தேசிய துணை தலைவர் மற்றும் செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். கடந்த 2024 லோக்சபா தொகுதியில் பாஜக சார்பில் கேந்த்ரபாரா தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் எம்பியானார்.
ஒடிசாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. அதற்கு முக்கிய பங்கு வகித்தார். அதற்கு முன்பாக அசாம் மற்றும் டெல்லி தேர்தல் பொறுப்பாளராக செயல்பட்டு பாஜகவை வெற்றி பெற வைத்தார். தற்போது அவர் தமிழக சட்டசபை தேர்தலில் பாஜகவின் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் துணை பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள முரளிதர் மொஹோல் மத்திய விமான போக்குவரத்து துறையின் இணை அமைச்சராக செயல்பட்டு வருகிறார். இவர்களின் நியமனம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
முரளிதர் மொஹோல் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர். இவர் 2019ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை புனே மேயராக செயல்பட்டார். கடந்த 2024 லோக்சபா தேர்தலில் பாஜக சார்பில் புனே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதல் முறை எம்பியான உடனேயே மத்திய இணையமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.

அதேபோல் பீகாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக பாஜக சார்பில் பொறுப்பாளர்கள் மற்றும் துணை பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பீகாரில் பாஜக மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக நிதிஷ் குமார் செயல்பட்டு வருகிறார். விரைவில் பீகாரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்நிலையில் தான் பீகார் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் பொறுப்பாளர் மற்றுமு் துணை பொறுப்பாளர்களை பாஜக மேலிடம் நியமனம் செய்து இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி பீகார் சட்டசபை தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை பொறுப்பாளர்களாக சிஆர் பாட்டீல், கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதில் தர்மேந்திர பிரதான் மத்திய கல்வித்துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார். ஒடிசாவை சேர்ந்தவர்.
சிஆர் பாட்டீல், மத்திய ஜல் சக்தி துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருவதோடு, குஜராத் மாநில பாஜக தலைவராக செயல்பட்டு வருகிறார். கேசவ் பிரசாத் மவுரியா உத்தர பிரதேச மாநில துணை முதல்வராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications