காணவில்லை.. துள்ளிக்குதித்து கொந்தளித்த திமுக கூட்டணி கட்சிகளை காணவில்லை.. அட்டாக் மோடில் பாஜக!
சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா சிப்காட் விரிவாக்கத்தை எதிர்த்து போராடும் விவசாயிகள் மீதான நடவடிக்கை விவகாரத்தை மிகத் தீவிரமாக கையில் எடுத்துள்ள பாஜக, திமுகவின் கூட்டணி கட்சிகளையும் டார்கெட் செய்து விமர்சித்து வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் தொழிற்பேட்டை 3-வது அலகு விரிவாக்கத்துக்காக, மேல்மா உட்பட 11 கிராமங்களில் 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை தமிழ்நாடு அரசு கைப்பற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் மேல்மா கூட்டுச்சாலையில், கடந்த ஜுலை 2-ம் தேதி காத்திருப்பு போராட்டம் தொடங்கப்பட்டது. இதில், விவசாயிகள் திரளாக பங்கேற்றனர்.

தொடர்ந்து நடைபெற்றுவந்த இந்த போராட்டத்தின் 124-வது நாளான கடந்த 2-ம் தேதி, மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, நியாய விலை கடை அட்டை ஆகியவற்றை செய்யாறு சார் ஆட்சியர் அனாமிகாவிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
125 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர். விவசாயிகளை விடுதலை செய்யக் கோரி தொடரப்பட்டுள்ள வழக்கு திருவண்ணாமலை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகள் 7 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "திருவண்ணாமலை மாவட்டத்தில், விவசாய நிலங்களை ஆக்கிரமிக்க முயற்சித்த திமுக அரசை எதிர்த்து அமைதியான முறையில் போராட்டம் நடத்திய விவசாயிகளை, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த திமுக அரசின் அடக்குமுறையைக் கண்டித்து, நவம்பர் 18ஆம் தேதி பாஜக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலையில் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
விவசாயிகள் மீதான நடவடிக்கை விவகாரத்தை பாஜக மிகத் தீவிரமாக கையில் எடுத்துள்ளது. அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முன்னெடுத்தன. வேளாண் மசோதா விவகாரத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக திமுக கூட்டணி தொடர் போராட்டங்களை நடத்தியது. இந்நிலையில், மேல்மா சிப்காட் விவகாரத்தில் திமுக கூட்டணி கட்சிகள் அமைதி காப்பதாகவும் விமர்சித்து அட்டாக் செய்து வருகிறது பாஜக.
பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "காணவில்லை! எட்டு வழிச் சாலை, நெடுவாசல் விவகாரங்களில் துள்ளிக்குதித்து கொந்தளித்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விசிக தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகிய அனைவரும் இப்போது திருவண்ணாமலையில் அமைதியாக போராடிய விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்த போது காணவில்லை." எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications