கேம் சேஞ்சர் தொகுதிகள்.. திமுகவிற்கு சவால் விடும் பாஜக.. அதிரவைக்கும் லிஸ்ட்!
சென்னை: தமிழகத்தில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், தென் மாவட்டங்களில் அதிக வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது,. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் போட்டியிடும் 3 தொகுதிகள், திருநெல்வேலி ஆகிய இடங்களில் வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக பாஜகவினர் நம்புகிறார்கள்.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவுக்க 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதில் கொங்கு மண்டலத்தில் ஆறு தொகுதிகளும், தென்மண்டலத்தில் 8 தொகுதிகளும், சென்னை உள்பட பிறபகுதிகளில் 6 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத் தேர்தலில் பாஜக போட்டியிடுகிறது. பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதேபோல் பாஜகவின 20 தொகுதி வேட்பாளர்களும் இன்றே அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
பாஜகவிற்கு தந்தவை
இநநிலையில் பாஜக தனக்கு செல்வாக்கு அதிகம் உள்ளதாக கூறி கொங்கு மண்டலத்தில் அதிகமான தொகுதிகளை அதிமுகவிடம் கோரியதாக கூறப்படுகிறது. ஆனால் அதிமுக கேட்ட தொகுதிகளை ஒதுக்க மறுத்துவிட்டதாம். இதனால் தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டிருக்கிறது. பல கட்ட பேச்சுக்கு பின்பே கொங்கு மண்டலத்தில் கோவை தெற்கு, மொடக்குறிச்சி, அரவக்குறிச்சி, உதகமண்டலம், தாராபுரம், தளி ஆகிய தொகுதிகளை மட்டும் பாஜகவிற்கு ஒதுக்க அதிமுக முன்வந்திருக்கிறது.
குமரி தொகுதிகள்
அதேநேரம் தென்மாவட்டங்களில் 8 இடங்கள் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆறு தொகுதிகளை கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமே நாகர்கோவில், குளச்சல், விளவன்கோடு ஆகிய 3 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. மேலும் இராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, காரைக்குடி, மதுரை வடக்கு ஆகிய தொகுதிகளை பெற்றிருக்கிறது.
வெற்றி உறுதி
இதில் கோவை தெற்கு, உதகமண்டலம், குளச்சல், விளவன்கோடு மற்றும் காரைக்குடியில் காங்கிரசுடன் நேரடியாக பாஜக மோதுகிறது. இந்த தொகுதிகளில் எப்படியும் வெற்றி பெற்றிட முடியும் என்று பாஜகவினர் நம்புகிறார்கள். குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள .குளச்சல், விளவன்கோடு நாகர்கோவில் தொகுதியில் பாஜக, தனிப்பட்ட செல்வாக்கு மூலம் வெல்ல வாய்ப்பு உள்ளதாக நம்புகிறது.
ஓட்டு பிரியும்
காரணம், கிறிஸ்துவர்களும் இந்து நாடார்களும் அதிகம் வாழும் இங்கே பாஜகவிற்கு வாக்கு வங்கி பலமாக உள்ளது. கடந்த 2016 சட்டசபை தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நாகர்கோவிலில் திமுகவின் சுரேஷ் ராஜனும், குளச்சலில் காங்கிரஸ் சார்பில் ஜெ. ஜி. பிரின்ஸும், விளவன்கோட்டில் காங்கிரஸ் சார்பில் எஸ். விஜயதாரிணியும் வெற்றி பெற்றார்கள். பாஜக இந்த மூன்று தொகுதிகளிலும் தனித்து நின்று இரண்டாம் இடத்தைப் பிடித்தது. தனித்து போட்டியிட்ட அதிமுகவோ நாகர்கோவிலிலும் குளச்சலிலும் மூன்றாம் இடத்தையும் விளவன்கோட்டில் நான்காவது இடத்தையுமே பிடித்தது. இரு கட்சியினரும் சேர்ந்து பெற்ற வாக்குகள் திமுக கூட்டணியைவிட அதிகம் ஆகும். அதுமட்டுமின்றி, கமல்ஹாசன் கூட்டணி,, தினகரன் கட்சிகள் கணிசமாக வாக்குகளை பிரிப்பார்கள் என்பதால் இந்த மூன்று தொகுதிகளில் கட்டாயம் வென்றுவிடலாம் என்று பாஜகவினர் நம்புகிறார்கள்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் தொகுதியை பொறுத்தவரை இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மறவர்கள் அதிகம் வசிக்கிறார்கள். இங்கு அதிமுக ஆதரவுடன் வெற்றி பெற முடியும் என்று பாஜக நம்புகிறது. கடந்த முறை அதிமுகவின் மணிகண்டன் வெற்றி பெற்றிருந்தார். நெல்லையை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் பாஜக வேட்பாளராக அங்கு களம் காண்பார் என்று தெரிகிறது. கட்சி தலைமை அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு முன்பே நெல்லை சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக தேர்தல் அலுவலரிடம் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த முறை சொற்ப வாக்குகளில் தான் திமுகவின் எ.எல்.எஸ். லெட்சுமணனிடம் தோற்றார் .மீண்டும் திமுக சார்பில் மீண்டும் லெட்சுமணனே போட்டியிடுகிறார் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும். கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் நிற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அங்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் யார் போட்டிட உள்ளார்கள் என்பது அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் அங்கும் வாக்குகள் அதிகம் பிரியும் என்பதால், அதிக வாக்குகள் பெற்று வானதி சீனிவாசன் வெல்வார் என்று பாஜகவினர் நம்புகிறார்கள்.