கோவையில் ஒரே நாளில் எந்த குழந்தைகளுக்கும் நடக்கக்கூடாதது.. அம்மா சிறையில்.. அப்பா உயிருடன் இல்லை
கோவை: மதுப்பழக்கம் எந்த குடும்பத்திற்கும் நல்லதே கிடையாது.. மது பழக்கம் தனிநருக்கும் நல்லது கிடையாது. மதுவால் கிடைக்கும் வரியை தவிர வேறு எந்த நன்மையும் நாட்டுக்கு கிடையாது. அதேநேரம் அந்த மதுவால் கிடைக்கும் வருமானம் ஒருபுறம் எனில் அதனால் ஏற்படும் இழப்பு அதனை விட மிக அதிகம். பல குடும்பங்களில் குழந்தைகள் பெற்றோரை பறிகொடுக்க மதுபழக்கம் காரணமாக இருக்கிறது. கோவையில் குழந்தைகளுக்கு நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
கோவை தடாகம் அருகே சோமையனூரை சேர்ந்தவர் 42 வயதாகும் கார்த்திக். பெயிண்டரான இவருக்கு 34 வயதில் ரேவதி என்ற மனைவி உள்ளார். திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். மனைவி ரேவதி சாய்பாபா காலனி பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார்.

கார்த்திக்கிற்கு குடிபழக்கம் இருந்துள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து மதுகுடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் சரிவர வேலைக்கு செல்லாமல் மது குடிப்பதற்காக ரேவதியிடம் பணம் கேட்டு அடிக்கடி சண்டை போட்டு வந்தாராம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் ரேவதி வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பியதும், கார்த்திக் அவரிடம் மது குடிப்பதற்காக பணம் கேட்டுள்ளார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ரூ.200-ஐ கொடுத்துள்ளார். பின்னர் மீண்டும் இரவு 7 மணிக்கு வந்து மதுகுடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்தாராம். அப்போதும் பணம் கொடுத்து அனுப்பியுள்ளார்.
பின்னர் இரவு 9.45 மணிக்கு குடிபோதையில் வீட்டிற்கு வந்த கார்த்திக் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ரேவதி கார்த்திக்கை பிடித்து கீழே தள்ளி, பருப்பு கடைவதற்கு பயன்படுத்தப்படும் கட்டையால் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் கார்த்திக்கின் தலை, முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. தலையில் இருந்து ரத்தக்கசிவு ஏற்பட்ட நிலையில், சிறிது நேரத்தில் கார்த்திக் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேவதியை கைது செய்தனர். தந்தை இறந்ததாலும், தாய் சிறைக்கு சென்றதாலும் 12 வயது மகனும், 9 வயது மகளும் கவனிக்க யாரும் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இப்படி தவிக்கும் குழந்தைகள் குறித்து கோவை மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவகலத்திற்கு தகவல் தெரிவித்தால், உள்ளூர் குழந்தைகள் மீட்புக் குழுவினர் உடனடியாக அந்தச் சோமையனூர் கிராமத்திற்குச் சென்று குழந்தைகளைத் தங்களின் பாதுகாப்பிற்குக் கொண்டு வரும் வாய்ப்பு உள்ளது. . தந்தை உயிருடன் இல்லாததால், தாய் சிறைக்குச் சென்ற விவரங்களை இந்த அதிகாரிகளிடம் சமர்ப்பித்தால், அந்த இரண்டு பிள்ளைகளுக்கும் (12 வயது மற்றும் 9 வயது) உடனடியாக மாதந்தோறும் தலா ₹4,000 நிதியுதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. அத்துடன் அரசே அவர்கள் தங்கும் விடுதியில் தங்க வைத்து முழு கல்வியும் முடிக்க வழி வகை செய்யும்.














Click it and Unblock the Notifications