19 மாவட்டங்களுக்கு அல்வா கொடுத்த விஜய்! எம்எல்ஏ இருந்தும் அமைச்சர் இல்லை! கடுப்பில் நண்பா - நண்பீஸ்
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற நிலையில் முதல் அமைச்சரவையில் செங்கோட்டையன், சிடிஆ நிர்மல் குமார், ராஜ்மோகன் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தார். தற்போது அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றிருக்கும் நிலையில் 23 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சி தரும் விதமாக அமைச்சரவையில் 19 மாவட்டங்களுக்கு இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசியல் வரலாற்றில் இவ்வளவு பெரிய மாறுபாடு இந்த ஆட்சியில் மட்டுமே அரங்கேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும் அதிர்வலை ஏற்படுத்திய தமிழக வெற்றிக் கழகம், விசிக, கம்யூனிஸ்ட், ஐயூஎம்எல் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. அதன்பிறகு மே 10ஆம் தேதி முதல்வராக விஜய் மற்றும் முதல் கட்டமாக 9 அமைச்சர்கள் பதவியேற்றனர்.

அப்போது அமைச்சரவை விரிவாக்கம் எப்போது என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் இருந்தது.
அந்த எதிர்பார்ப்புக்கு முடிவுகட்டும் வகையில் தற்போது 23 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் மிகவும் கவனிக்கப்படும் விஷயம் என்னவென்றால், சுமார் ஆறு தசாப்தங்களுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாடு அமைச்சரவையில் மீண்டும் இடம் கிடைத்திருப்பதுதான்.
முதல்வர் விஜய்
கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜேஷ் குமார் மற்றும் மேலூர் தொகுதி எம்.எல்.ஏ விஸ்வநாதன் ஆகிய இரு காங்கிரஸ் உறுப்பினர்களும் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். இது கூட்டணி அரசில் காங்கிரஸின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், முதல்வர் விஜய்யின் நெருக்கமானவர்களுக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி தொகுதி எம்.எல்.ஏ ஸ்ரீநாத் அதில் முக்கியமானவர். விஜய்யின் நம்பிக்கைக்குரியவராக பார்க்கப்படும் அவர் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
அமைச்சரவை விரிவாக்கம்
இளம் தலைமுறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் சில பெயர்களும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, மத்திய அமைச்சர் எல். முருகனை அவிநாசி தொகுதியில் தோற்கடித்த எஸ். கமலிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சார காலத்திலேயே அவர் தலைமையின் கவனத்தை ஈர்த்திருந்தார். பெண்களுக்கும் இந்த அமைச்சரவை பட்டியலில் கணிசமான இடம் வழங்கப்பட்டுள்ளது. குமாரபாளையம் தொகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி, ராஜபாளையம் தொகுதியின் ஜெகதீஸ்வரி, ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியின் மேரி வில்சன் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.
மண்டல பிரநிதித்துவம்
தென் மாவட்டங்கள், மேற்கு மண்டலம், டெல்டா பகுதிகள், சென்னை மாநகர் பகுதிகள் என அனைத்து பகுதிகளிலிருந்தும் உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் தொகுதியின் ரஞ்சித்குமார், கும்பகோணம் தொகுதியின் வினோத், திருவாடானை தொகுதியின் ராஜீவ், கடலூர் தொகுதியின் ராஜ்குமார், அரக்கோணம் தொகுதியின் காந்திராஜ் உள்ளிட்டோரும் புதிய அமைச்சர்களாக பதவியேற்கிறார்கள்.
ஸ்ரீரங்கம் ரமேஷ்
அதேபோல், ராசிபுரம் தொகுதியின் லோகேஷ் தமிழ்செல்வன், சேலம் தெற்கு தொகுதியின் விஜய் தமிழன் பார்த்திபன், ஸ்ரீரங்கம் தொகுதியின் ரமேஷ், வேளச்சேரி தொகுதியின் குமார், கோவை வடக்கு தொகுதியின் சம்பத் குமார் ஆகியோரும் அமைச்சரவை பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். முஸ்லிம் சமூக பிரதிநிதித்துவமாக அறந்தாங்கி தொகுதியின் முகமது ஃபர்வாஸ் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கூட்டணி கட்சிகள்
ஆனால், கூட்டணியில் இருந்த விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகளுக்கு இந்த கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம் வழங்கப்படவில்லை. அந்தக் கட்சிகளுக்கு அமைச்சரவை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்கள் அமைச்சரவையில் இணைய விருப்பமில்லை என தெரிவித்ததால் தான் விஜய் அவர்கள் பெயரைச் சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சரவை பட்டியல்
அதிர்ச்சி தரும் விதமாக இந்த அமைச்சரவை பட்டியலில் தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. திமுக - அதிமுக ஆட்சி காலங்களில் ஒரு சில மாவட்டங்களில் எந்த எம்எல்ஏவும் வெற்றி பெறவில்லை என்றாலும் கூட அருகில் உள்ள மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள். இந்த தேர்தலில் ஒரு சில மாவட்டங்களில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெறவில்லை என்றாலும் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் இருக்கும் மாவட்டங்களுக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
19 மாவட்டங்கள்
தற்போதைய தகவல்களின்படி 19 மாவட்டங்களுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படவில்லை. நீலகிரி, தென்காசி, நெல்லை, தேனி, திண்டுக்கல், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், திருவாரூர், தருமபுரி, கரூர், கிருஷ்ணகிரி ஆகிய 19 மாவட்டங்களை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர் பட்டியலில் இடம்பெறவில்லை.
திண்டுக்கல், தேனி
இந்த பட்டியலில் திண்டுக்கல், தேனி, நெல்லை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருந்தாலும் அவர்களுக்கு அமைச்சரவை வாய்ப்பு வழங்கப்படவில்லை. தற்போதைய பட்டியலில் பெரும்பாலும் விஜய்க்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. புதியவர்கள் எம்எல்ஏ ஆகியிருந்தாலும் அமைச்சரவை இடம் வழங்குவதில் விஜய்க்கு விருப்பமில்லை என சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் காஞ்சிபுரம் போன்ற சிறிய மாவட்டங்களுக்கு இரண்டு அமைச்சர்கள் வழங்கப்பட்டு இருப்பதும், திண்டுக்கல் போன்ற பெரிய மாவட்டங்களுக்கு ஒரு அமைச்சர் பதவி கூட வழங்கப்படாதது பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications