ஜெயிச்சும் தோற்ற ‘ஜெயண்ட் கில்லர்’.. விஎஸ் பாபுவுக்கு ஏன் ‘நோ’ சொன்னார் விஜய்? - ஓர் அலசல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இருந்து 7 தவெக எம்.எல்.ஏக்கள் விஜய்யின் கேபினட்டில் இடம்பிடித்துள்ள நிலையில், 'ஜெயண்ட் கில்லர்' விஎஸ் பாபுவுக்கு இடம் கிடைக்கவில்லை. இன்றைய அமைச்சரவை விரிவாக்கத்தில் சென்னையைச் சேர்ந்த 2 எம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்பு அளித்துள்ள விஜய், விஎஸ் பாபுவுக்கு இடம் தரவில்லை. இது பாபு தரப்பை கடும் அப்செட் ஆக்கியுள்ளது. விஜய்யின் கணக்கு என்ன?

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலின் "மெகா அப்செட்" எங்கே நடந்தது என்று கேட்டால், அது நிச்சயம் கொளத்தூர் தொகுதியில்தான். திமுக-வின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்பட்ட கொளத்தூரில், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையே வீழ்த்தி ஒட்டுமொத்த இந்திய அரசியலையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் தமிழக வெற்றிக் கழகத்தின் வி.எஸ். பாபு.

Vijay tvk chennai vs babu

அரசியல் வட்டாரத்தில் ஒரே நாளில் "ஜெயண்ட் கில்லர்" என்று புகழப்பட்ட வி.எஸ். பாபுவுக்கு, முதலமைச்சர் விஜய்யின் அமைச்சரவையில் நிச்சயம் ஒரு 'வெயிட்டான' இடம் கிடைக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் ஆவலோடு காத்திருந்தனர். ஆனால், முதல் பட்டியலிலும் அவர் பெயர் இல்லை. இன்று நடந்த அமைச்சரவை விரிவாக்கத்திலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் வி.எஸ். பாபு தற்போது கடும் அப்செட்டில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சுவாரசியமான அரசியல் நகர்வின் பின்னணி என்ன? விஜய் ஏன் இவரைத் தவிர்த்தார்? அலசுவோம்!

புரசை பாபுவின் பின்னணி

வி.எஸ். பாபு ஒன்றும் அரசியல் களம் அறியாத புதியவர் அல்ல. 2006-லேயே திமுக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனவர். ஒருகாலத்தில் வடசென்னை திமுகவின் முக்கிய முகமாக விளங்கிய இவர், 2011 தேர்தலில் இதே கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டபோது பின்னால் இருந்து தேர்தல் வேலைகளைப் பார்த்து அவரை ஜெயிக்க வைத்தவர்.

அதன் பிறகு திமுக, அதிமுக எனப் பயணித்து, தேர்தல் நெருங்குவதற்குச் சில மாதங்களுக்கு முன்புதான் தவெகவில் இணைந்தார். பழைய தொகுதிப் பரிச்சயம், திமுகவின் வாக்கு வங்கியை உடைக்கும் வியூகம் என அனைத்தையும் சரியாகச் செய்து, ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்தார்.

விஎஸ் பாபு ஆதரவாளர்களின் குமுறல்

கொளத்தூரில் ஸ்டாலினையே வீழ்த்திய ஒருவருக்கு, புதிய அமைச்சரவையில் டாப்-5 இடங்களுக்குள் முன்னுரிமை கிடைக்கும் என்று வி.எஸ். பாபுவும் அவரது ஆதரவாளர்களும் உறுதியாக நம்பினர். ஆனால், விஜய்யுடன் அமைச்சரவையில் 9 பேர் இடம்பெற்றபோது விஎஸ் பாபுவுக்கு இடம் கிடைக்கவில்லை. கட்சிக்காக மிகப் பெரிய "தலை"யை உருட்டிய பாபுவுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என அவரது ஆதரவாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இன்று நடந்த கேபினட் விரிவாக்கத்திலாவது சென்னை கோட்டாவிற்குள் தனக்கு இடம் கிடைக்கும் என நம்பினார் விஎஸ் பாபு. ஆனால் ஆர்.கே.நகர் மரிய வில்சன் மற்றும் வேளச்சேரி குமார் ஆகியோருக்கு மட்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது வி.எஸ். பாபு தரப்பை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மு.க.ஸ்டாலினை தோற்கடித்து கட்சியின் முகத்தையே மாற்றிய ஜெயண்ட் கில்லரை விடவா இவர்கள் பெரிய சாதனை செய்துவிட்டார்கள்? என்ற கேள்வி கொளத்தூர் வட்டார தவெக தொண்டர்களிடம் எழுந்துள்ளது.

பாபுவுக்கு விஜய் அமைச்சர் பதவி தராதது ஏன்?

முதலமைச்சர் விஜய் எந்தவொரு முடிவையும் உணர்ச்சிவசப்பட்டு எடுப்பதில்லை, மாறாக மிகத் துல்லியமான கணக்குகளுடன்தான் காய்களை நகர்த்துகிறார் என்பதற்கு வி.எஸ். பாபுவின் விவகாரம் ஒரு சிறந்த உதாரணம். இதன் பின்னணியில் 3 முக்கிய காரணங்கள் பார்க்கப்படுகின்றன.

1. கட்சித் தாவல் முத்திரை

வி.எஸ். பாபு திமுக, அதிமுக என மாறிவிட்டு கடைசியாக தவெகவிற்கு வந்தவர். ஆரம்பத்திலிருந்தே விஜய்யை நம்பி வந்த உழைத்த 'கோர் டீம்' மற்றும் ரசிகர்களுக்கு அமைச்சரவையில் முன்னுரிமை தர விஜய் விரும்பியுள்ளார். வந்த உடனே அமைச்சர் பதவி கொடுத்தால் கட்சிக்காக உழைத்த பழைய நிர்வாகிகளுக்குள் அதிருப்தி எழும்.

2. அரசியல் பழிவாங்கல் இமேஜ் வேண்டாம்

விஎஸ் பாபுவை அமைச்சராக்கினால், "ஸ்டாலினை தோற்கடித்ததால் திமுகவை பழிவாங்கவே இந்த பதவி" என்ற தேவையற்ற அரசியல் விமர்சனம் எழும். தனிநபர் பழிவாங்கலாக இல்லாமல், நிர்வாக ரீதியான அமைச்சரவையாகத் தன் அரசை முன்னிறுத்த விஜய் நினைக்கிறார்.

Vijay tvk chennai vs babu

3. அரசியல் விவேகம்

ஜெயித்த விஎஸ் பாபுவை விட, ஸ்டாலின் தோற்றதால் கிடைத்த அரசியல் வெயிட்டேஜே தவெக-வுக்கு அதிகம். அதற்கு பாபுவுக்கு எம்.எல்.ஏ பதவியே ஒரு பெரிய அங்கீகாரம். விஎஸ் பாபுவுக்காக கொளத்தூரில் விசிலுக்கு வாக்களிக்கவில்லை" என்பதுதான் விஜய்யின் தற்போதைய கணக்காக இருக்கிறது.

பாபுவை சமாதானப்படுத்துமா தலைமை?

வி.எஸ். பாபு தற்போது அப்செட்டில் இருந்தாலும், அவர் வெளிப்படையாகக் கட்சிக்கு எதிராக இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. சட்டமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்கும் போது கூட விஜய்யைக் கட்டிப்பிடித்துத் தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.

தவெக தலைமை இவரை அவ்வளவு எளிதாகக் கைவிட்டுவிடாது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். அமைச்சரவையில் இடம் இல்லாவிட்டாலும், ஏதேனும் ஒரு பவர்ஃபுல் வாரியத் தலைவர் பதவி கொடுத்து இவரைச் சமாதானப்படுத்த விஜய்யின் டீம் திட்டமிட்டு வருவதாக கோட்டை வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.

விஜய்யின் இந்த "நோ கேபினெட்" அஸ்திரத்தை வி.எஸ். பாபு எப்படி எதிர்கொள்ளப் போகிறார்? கொளத்தூர் கோட்டையில் தவெகவின் செல்வாக்கை இது பாதிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+