பரபரத்த சென்னை.. அமித்ஷா வந்தவுடன் இருட்டு! பவர் கட்டால் பதறிய பாஜகவினர்! வெடித்த சாலை மறியல்
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தவுடன் விமான நிலையத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதை கண்டித்து பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக இன்று சென்னை வந்து இருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பாஜக மூத்த நிர்வாகி எச்.ராஜா உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பை அளித்தனர்.
விமான நிலையத்தில் பாஜக தலைவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட அமித்ஷா, காரில் ஏறி புறப்பட்டார். அவருக்கு வழி நெடுகிலும் பாஜக தொண்டர்கள் கட்சிக் கொடிகளுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஒரு கட்டத்தில் காரில் இருந்து கீழே இறங்கிய அமித்ஷா தொண்டர்களின் ஆரவாரத்தை ரசித்தார்.
அங்கிருந்து கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதிக்கு சென்ற அமித்ஷா, சினிமா பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள், தொழிலதிபர்கள் உட்பட 24 பேரை சந்தித்து இரவு விருந்து வழங்குகிறார். இந்த தமிழ்நாடு பயணத்தில் வேலூரில் நடைபெற உள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் அமித்ஷா கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார்.

அதேபோல் கட்சியின் மாநில நிர்வாகிகளை சந்திக்கும் அமித்ஷா நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று சென்னை விமான நிலையத்துக்கு அமித்ஷா வந்தவுடன் ஒரு பகுதியாக மின்சாரம் தடைபட்டது.
இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் சாலை மறியலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜகவினரின் போராட்டம் காரணமாக அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவை சேர்ந்த தொண்டர் கூறுகையில், "அமித்ஷாவை வரவேற்கும்போது மின்சாரத்தை துண்டித்ததை கண்டித்து மறியல் செய்கிறோம்.

அமித்ஷாவுடைய பாதுகாப்பு பிரச்சனையாக உள்ளது. அமித்ஷா இந்தியாவிலேயே முக்கியமான பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கிறார். இந்த நிலையில் மின்சாரத்தை துண்டித்து தீய சக்திகளை உள்ளே அனுப்பி வன்முறை செய்ய நினைத்த திமுக அரசை கண்டிக்கிறோம்." என்றார்.
மற்றொரு பாஜக பெண் தொண்டர் கூறுகையில், "ஒரு மத்திய உள்துறை அமைச்சர் வரும்போது மின்சாரத்தை துண்டிப்பது எப்படி சரி? எதற்கு மின்சாரத்தை துண்டிக்க வேண்டும். ஒரு நியாயம் வேண்டாமா?" என்று தெரிவித்தார். இந்த நிலையில் மின் கம்பியில் ஏற்பட்ட பழுது காரணமாகவே மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக மின்வாரியம் விளக்கமளித்து உள்ளது.
இந்த மறியல் போராட்டத்தில் கலந்துகொண்ட பாஜக மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன், "மின் தடை தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். எப்படி அமித்ஷா வரும்போது விமான நிலையத்தில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்படும். இது பாதுகாப்பு குறைபாடு. தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இதற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்." என்று தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications