3ல் ஒரு பங்கில் 2வது இடம்.. 81 சட்டசபை தொகுதியில் அதிமுகவை பின்னுக்கு தள்ளிய பாஜக!
சென்னை: தமிழ்நாட்டில் நடந்த லோக்சபா தேர்தலில் சட்டசபை வாரியாக பதிவாகிய வாக்குகள் 81 தொகுதிகளில் பாஜக 2வது இடம் பிடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றியை பெற்றுள்ளது. இந்த லோக்சபா தேர்தலில் பாஜகவால் ஒரு தொகுதியை கூட கைப்பற்ற முடியவில்லை என்றாலும், போட்டியிட்ட 23 தொகுதிகளில் 9 தொகுதிகளில் 2வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. இதன் மூலமாக தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் 11.24ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் சட்டசபை வாரியாக பதிவான வாக்குகள் விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி திமுக கூட்டணி 221 சட்டசபை தொகுதிகளில் முதலிடத்தை பிடித்துள்ளது. அதேபோல் அதிமுக 8 சட்டசபை தொகுதிகளிலும், பாமக 2 சட்டசபை தொகுதிகளிலும், 2 தொகுதிகளில் தேமுதிக வேட்பாளர்கள் முதலிடத்தையும் பிடித்துள்ளனர். ஆனால் பாஜக ஒரு தொகுதியில் கூட முதலிடத்தை பிடிக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
இருந்தாலும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் ஏராளமான சட்டசபை தொகுதிகளில் 2வது இடத்தை பிடித்துள்ளனர். கிட்டத்தட்ட 81 தொகுதிகளில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சென்னையில் மட்டும் 13 சட்டசபை தொகுதிகளில் 2வது இடத்தை பிடித்துள்ள பாஜக, கோவையிலும் குறிப்பிடத்தகுந்த தொகுதிகளில் 2வது இடத்தை பிடித்துள்ளது.
இதன் மூலமாக தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் மூன்றில் ஒரு பங்கு சட்டசபை தொகுதிகளில் பாஜக அதிமுகவை பின்னுக்கு தள்ளி 2வது இடத்திற்கு வந்துள்ளது. குறிப்பாக தென் தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சி அதிகரித்துள்ளதாக பார்க்கப்படுகிறது. இந்த லோக்சபா தேர்தலில் மட்டும் பாஜக வேட்பாளர் சுமார் 49 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளனர்.
இது அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை தமிழ்நாட்டின் அரசியல் திமுக மற்றும் அதிமுக இடையிலான போட்டியாக இருந்து வந்த சூழலில், 3வது பெரிய கட்சியாக பாஜக வந்துள்ளதாக அக்கட்சியினர் கூறி வருகின்றனர். பாஜகவின் வளர்ச்சி தொடரும் பட்சத்தில், அடுத்த சட்டசபை தேர்தலில் அதிமுகவிற்கு சவாலாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications