சர்ச்சை "போஸ்டர்".. முதல்வருக்கு எதிராக அவதூறு.. தலைமறைவான அண்ணாமலை "பி.ஏவை" தட்டி தூக்கிய போலீஸ்!
சென்னை: முதல்வர் ஸ்டாலின் குறித்து போலி செய்தி ஒன்றை போஸ்டர் அடித்து ஒட்டிய பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் முருகன் நேற்று சென்னையில் கைது செய்யப்பட்டார்.
சமீபத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சனம் செய்து ஊடகம் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. அட்டைப்பட செய்தியில் அண்ணாமலையை விமர்சனம் செய்து கார்ட்டூன் வெளியிடப்பட்டு இருந்தது.
இந்த அட்டைப்படம் வைரல் ஆன நிலையில் பாஜகவினர் சார்பாக இதற்கு எதிராக பொய்யான ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி முதல்வர் ஸ்டாலினை, குறிப்பிட்ட ஊடகம் கிண்டல் செய்ததாக பொய்யான அட்டைப்படத்தை உருவாக்கி அதை சென்னையில் போஸ்டராக வெளியிட்டனர்.

போலி அட்டைப்படம்
ஒரு பத்திரிக்கை நிறுவனத்தின் பெயரில் போலி அட்டைப்படத்தை உருவாக்கி, அதை போஸ்டராக ஒட்டி உள்ளனர். சென்னையில் பல்வேறு இடங்களில் கடந்த 11ம் தேதி இந்த போஸ்டர் ஒட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த போஸ்டர்களை திமுகவினர் ஆங்காங்கே கிழித்து எறிந்தனர். இந்த நிலையில் திமுக சார்பாக இதற்கு எதிராக புகாரும் கொடுக்கப்பட்டது. துறைமுகம் திமுக கிழக்குப் பகுதி செயலாளர் ராஜசேகர் இதற்கு எதிராக போலீசில் புகார் கொடுத்தார்.

போஸ்டர்
மாநகராட்சி இடங்களில் போஸ்டர் ஒட்ட கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளதால் சென்னை மாநகராட்சி மண்டலம் ஐந்தின் உதவி பொறியாளர் ராஜ்குமார் என்பவரும் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போஸ்டர்களை ஒட்டியது யார் என்று போலீசார் தேடி வந்தனர். போஸ்டர் அச்சடிக்கப்பட்ட இடம் கண்டுபிடிக்கப்பட்டு, அதன்மூலம் போஸ்டர் ஒட்டிய நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். போஸ்டர்களை ஒட்டிய இந்த நிலையில் ஃபிலிப்ராஜ் என்ற நபர் கைது செய்யப்பட்டார்.

என்னசொன்னார் ?
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்து ஜனநாயக முன்னணியின் சென்னை மாநகரச் செயலாளர் சத்தியநாதன் என்பவர்தான் போஸ்டரை கொடுத்தார் என்று அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இவர்களிடம் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் அடிப்படையில் பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் முருகன் சொல்லித்தான் இப்படி போஸ்டர்களை ஒட்டியதாக அவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர் .

விசாரணை
இவரின் சார்பாக போஸ்டருக்கான டிசைன் செய்யப்பட்டு அதை அனுப்பி போஸ்டராக ஒட்டும்படி கூறியுள்ளனர். இந்த விவகாரம் தெரிந்ததும் பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் முருகன் தலைமறைவாகி உள்ளார். இவரை நேற்று அதிகாலையில் இருந்து போலீசார் தேடி வந்தனர். இதையடுத்து இவரை தேடிப்பிடித்த போலீசார் நேற்று இரவு அவரை கைது செய்து, கோர்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications