ஸ்டாலினுக்கு வாழ்த்து மழை பொழியும் பாஜக முதலமைச்சர்கள்! பசவராஜ் பொம்மை உட்பட ஒரு பெரிய லிஸ்ட் நீளுது
சென்னை: சென்னையில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக நடைபெற பாஜக முதலமைச்சர்கள் பலரும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
கடிதங்கள் மூலமும் தொலைபேசி வாயிலாகவும் முதலமைச்சர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு தங்கள் வாழ்த்தை அவர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
இது தொடர்பான விவரம் வருமாறு;

முதல்வர்களுக்கு அழைப்பிதழ்
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் 44-வது சர்வதேச சதுரங்கப் போட்டியினை பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை தொடங்கி வைக்க உள்ளார். இத்தொடக்க விழா நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு பல்வேறு மாநில முதலமைச்சர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில் அமைச்சர்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கினர்.
Recommended Video

கடிதம் மூலம்
கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், அருணாச்சல பிரதேச மாநில முதலமைச்சர் பெமா காண்டு, சிக்கிம் மாநில முதலமைச்சர் பிரேம் சிங் தமாங், ஆகியோர் 44-வது சர்வதேச சதுரங்க போட்டி சிறப்பாக நடைபெற தங்களது வாழ்த்துகளை தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளனர்.

தொலைபேசியில் பேச்சு
மேலும், கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு நேரடியாக பேசியதுடன், தமிழகத்தில் 44-வது சர்வதேச சதுரங்க போட்டி சிறப்பாக நடைபெற தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இதேபோல் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் ஆகியோர் சமூக வலைத்தளங்கள் மூலம் சர்வதேச சதுரங்க போட்டி தமிழகத்தில் சிறப்பாக நடைபெற தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

முக்கிய நிகழ்வு
செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரப் பதாகைகளில் பிரதமர் மோடி படம் இடம்பெறவில்லை என தமிழக பாஜகவினர் தமிழக அரசையும், முதலமைச்சர் ஸ்டாலினையும் விமர்சித்து வரும் நிலையில், பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் பலர் தமிழக முதல்வருக்கு தங்கள் வாழ்த்தை பகிர்ந்திருப்பது முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications